இயந்திரத்தனமான இன்றைய உலகில் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கும் அவதியில் எங்கள் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை பெரும்பாலும் இழந்து தவிக்கிறோம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டனின் மனைவி மார்த்தா வோசிங்டன், எங்கள் மகிழ்ச்சி நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதாவது எங்கள் பார்வையில் தான் பெருமளவில் தங்கியிருப்பதாகவும் கூறிய பொன்மொழியொன்றை இணையத்தளத்தில் வாசித்த ஞாபகம்.என் அனுபவத்தில் கூட அவர் கூறியது மிகவும் உண்மை என்று அறிந்திருக்கிறேன்.அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எங்களை வெற்றியாளர் என்று நினைத்தால் உண்மையிலேயே வெற்றியாளர் ஆகின்றோம் என்று.அதற்காக நினைத்தால் மட்டும் அப்படி ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்கக்கூடும்.யார் அவ்வாறு திடமாக நம்புகிறார்கள்.உண்மையான ஊக்கம்,அர்ப்பணிப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை உள்ள ஒருவனே அவ்வாறான ஒரு திட நம்பிக்கையைக்கொண்டிருப்பான். மற்றவர்கள் நான் இதில் வெற்றி பெறுவேனோ இல்லை தோற்றுவிடுவேனோ என்று சந்தேகத்துடனயே இருப்பார்கள்.வெற்றி மட்டுமல்ல எங்கள் மகிழ்ச்சியும் கூட எங்கள் எண்ணங்களில் தான் தங்கியிருக்கிறது.பிரச்சினையில் இருக்கும்போது கூட நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எங்கள் மனது நம்பினால் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறுவோம்.பிரச்சினைகளை யோசித்து எதுவும் நடக்கப்போவதில்லை என்ற சந்தர்ப்பத்தில் எதற்காக சோகத்தை வரவழைத்து சுயபச்சாதாபத்தையோ இல்லை மற்றையவர்களின் கழிவிரக்கத்தையோ தேடவேண்டும்.நண்பர் புல்லட்டின் பதிவு ஒன்றில் கூட இது சம்பந்தமாக ஒரு சம்பவத்திற்கான எங்கள் மனதின் மறுதாக்கம் பற்றி ஆராய்ந்திருந்தார்.
"யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்........"என்ற பாடல் வரி தான் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.எம்மில் பெரும்பாலோனோர் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணம் என்னவென்றால் கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்.தெருவில் படுத்துறங்கும் பிச்சைக்காரன் தொடக்கம் பங்களாவில் பஞ்சணையில் படுத்துறங்கும் கோடீசுவரன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும்.இதை நாம் முதலில் புரிந்துகொண்டாலே எமக்குள்ள கவலையில் பாதி குறைந்து விடும்.
எங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது "இவ்வாறு நடந்துவிட்டதே " என்று ஏங்கித்தவித்தே எங்கள் ஆயுளில் பாதியைக்கழித்துவிடுகிறோம்.நடந்ததை நினைத்து ஏங்குவதால் இனி நடக்கப்போகும் எதையும் எம்மால் மாற்றிவிடமுடியாது.எனவே எதற்காக இந்த ஏக்கம் தவிப்பு என்று நம்மை நாமே வருத்திக்கொள்ளவேண்டும்(இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் எழுத்துக்களில் கதைகளில் எனக்கு பிடித்த முக்கியமான விடயமே அவர் கதைகளில் வரும் எந்த கஸ்டம் வரும்போதும் சலித்துவிடாமல் வாழ்க்கையோடு போராடிவெற்றிபெறும் அவரின் நாயகிகள் தான்.முன்பெல்லாம் நான் கூட இதே தவறைத்தான் செய்துவந்திருக்கிறேன்.சிறிய கஸ்டம் வரும்போதும் மனமொடிந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடுவேன்.ஆனால் அனுபவப்பாடங்கள் மூலமாக என்னை நானே வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு பலவாறு சொன்னாலும் நடைமுறைப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதன்று.கஸ்டங்கள் கவலைகள் வரும்போது மனம் சோர்ந்துபோய்விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றே.எனவே முழுக்க முழுக்க அவற்றை மறந்துவிடமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கவலை என்னும் கறையான் எங்கள் மனப்புத்தகத்தை அரித்துவிடாமல் பார்க்கவேண்டியது எங்கள் பொறுப்பாகும்.அதற்காக பிரச்சினைகள் வரும்போது யாரையும் ஓடியொளியும்படி நான் சொல்லவில்லை.தைரியமாக எந்த சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.தீர்க்கக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதற்கு அப்பால் அவற்றையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.
இவ்வளவு நேரமும் பிரச்சினைகளில் இருந்து அவற்றின் தாக்கங்களிலிருந்து எவ்வாறு விலகி இருக்கலாம் என்று பார்த்தோம்.இத்தனையையும் தாண்டி எங்கள் மனதைக்காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.
ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்.எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய வாசிக்கலாம்.அது மட்டுமல்ல குடில்(blog)போன்றவற்றை அமைத்து உங்கள் உணர்வுகளை படைப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும்.நானென்றால் மனதுக்குப்பிடித்த பாடல்களைக்கேட்பேன்.சில நேரங்களில் வாய்விட்டு பாடுவதும் உண்டு.(இந்த விசப்பரீட்சையை உங்கள் வீட்டில் செய்யமுன் அதற்குரிய சூழல் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு கிலோ பஞ்சு வாங்கி வீட்டுக்காரருக்கு கொடுத்து கழுதைகள் உள்ளே புகாத வண்ணம் குளியலறைக்கதவு,யன்னல்கள் பலமாக இருக்கின்றன என்பவற்றையெல்லாம் பரிசோதித்துவிட்டே நான் அதை செய்வேன்...ஹி..ஹி..ஹி... ).சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....இப்போதெல்லாம் ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடைய நினைப்பு முழுவதும் என்னுடைய குடிலில் அடுத்து என்ன எழுதலாம் என்பது பற்றி தான்..:) சிலருக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் இருக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கும்.எதுவாயிருந்தாலும் உங்கள் மனதுக்கு திருப்தி சந்தோசம் அளிக்கக்கூடிய விடயங்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.
அடுத்ததாக உங்கள் பிரச்சினைகளை மனம்விட்டு யாரிடமாவது சொல்லுங்கள்.ஆனால் கேட்பவர் உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ளவில்லை என்றால் அதனால் வரும் காயத்தை ஆற்றுவதற்கு எந்த மருந்தும் இல்லை.எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களை உறவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.இன்று உலகில் தற்கொலைசெய்யும் பலரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தீவிரமான பிரச்சினையைக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதைவிட தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு பேசமுடியாதவர்களாகவே பெரும்பாலும் இருந்திருப்பார்கள்.எனவே இந்தச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறேன்.உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் ஏன் தெரியாதவர்களாக இருந்தால் கூட தங்கள் பிரச்சினைகளை மனம்திறந்து உங்களிடம் பேசவரும்போது அவர்களுடைய பிரச்சினைகள் தவிப்புக்களை காதுகொடுத்து கேளுங்கள்.குறைந்தபட்சம் கேட்கிறமாதிரி நடிக்கவாவது செய்யுங்கள்.(அவர்கள் அறியாவண்ணம்).நீங்கள் அவ்வாறு செவிமடுப்பதாக அவர்கள் நம்பும்போது அவர்களின் மனதில் உள்ள பாரம் பாதியாகக்குறைந்துவிடும்.
எங்கள் சந்தோசத்தை கெடுக்கும் இன்னொரு முக்கியமான எதிரி ஒப்பீடு.நண்பர்களோடு ,கூட வேலைபார்க்கின்றவர்களோடு எங்களை ஒப்பீடு செய்வது.இறைவனின் படைப்பில் நாங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்குரிய கடமையை சரிவரச்செய்யுங்கள்.எங்களோடு நாங்களே போட்டிபோட்டு ஒவ்வொரு நாளும் எங்களை நாங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.ஆரோக்கியமான வளர்ச்சிக்காக மற்றவர்களோடு போட்டிபோடலாம்.அதில் பிழையில்லை.ஆனால் மற்றவர்களின் வளர்ச்சியைபார்த்து மனம் வெந்துபோவதற்காக அல்ல.பெரியவர்கள் சொல்வார்கள் "உனக்கு கீழ் இருக்கும் கோடி நினைத்து நிம்மதி தேடு "என்று.எங்களை விட உயரத்தில் இருப்பவர்களை பார்த்து மனம் நோவதை விட்டு எங்களை விடவும் குறைந்த மட்டத்தில் இருப்பவர்களை நினைத்துப்பார்த்து நிம்மதி அடையவேண்டும் என்று.என்னதான் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இதை கடைப்பிடிப்பது என்பது கொஞ்சம் கடினமான விடயம் தான்.அதற்குரிய மனப்பக்குவம் இலகுவில் வந்துவிடாது.
இறைவனின் படைப்புக்களிலேயே உன்னதமானது மனிதப்பிறவி.எம்மில் பலர் அந்த மகத்துவத்தை புரியாமலே இருக்கிறோம்.பிரச்சினைகள் சோதனைகள் வரும்போது தைரியமாக அவற்றை எதிர்கொள்ளுங்கள்.அந்த சவாலை நீங்கள் சமாளித்து வெற்றிகொள்ளும்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மகிழ்ச்சி திருப்தி உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர்கள்.என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.ஆம்......
"பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை".......இந்தப்பாடல் வரிகளை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இத்தனை விளக்கங்களுடன் கூறிய எல்லா கருத்துக்களையும் கவிஞர் இந்தப்பாடலில் அழகாக அடக்கித்தந்திருக்கிறார்.
சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே அங்குமிங்கும் கொட்டிக்கிடக்கு
கண்ணிரண்டு செவியும் திறந்து வைத்தால் சுத்தி சுத்தி இன்பமிருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும் பூவின் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது..........
இருட்டைக்கண்டு மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை
அகலும் செய்துவிடும்
மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
மனித ஜாதி ஒன்று தான் சிரிக்கத்தெரிந்தது.....
இவ்வாறாகத்தொடர்ந்து செல்கிறது பாடல்.இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று நினைக்கிறீர்கள்...அவர் வேறு யாருமல்ல.....
எங்கள் வைரவரிக்கவிஞர் கவிப்பேரரசுவே தான்......