Sunday, December 25, 2011

தனித்துவம் பேணுவோம்

தனிப்பட்ட வலைப்பதிவில் பேச்சுவழக்கில் எழுதி என்னை தனித்துக்காட்ட பிரித்துக்காட்ட விரும்புவதில்லை.அதனால் எழுத்துத்தமிழில் தான் பதிவுகள் எழுதிவருகிறேன்..

சினிமா பார்ப்பதில் கொஞ்சம், நகர வாழ்க்கை பல்லின கலாச்சார சங்கமம் ஒரு பக்கம்  இணையவழி பல நாட்டு நண்பர்கள் தொடர்பு என்று பேச்சு வழக்கில் 100  % ஈழவழக்கு இல்லாவிட்டாலும் ஈழமொழிநடையில் பதிவு எழுதும்போது பலமுறை யோசித்து இயன்றளவு சரியான ஈழவழக்கு சொற்கள் மட்டும் பாவித்து எழுதியிருக்கிறேன்.ஒரு வகையில் எதிர்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தல் அது.அதிலே எங்கள் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்று ஒரேயொரு நோக்கம் மட்டும் தான்.

இன்று ஈழம் சம்பந்தமாக பொதுவலைத்தளமொன்றில் போடப்பட்ட ஒரு பதிவு பார்க்கக்கிடைத்தது."பொண்ணுங்க","பசங்க","பண்ணுங்க","வருவாங்க" இந்த சொற்கள் எல்லாம் ஈழ வழக்கில் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது...

தனிவலைப்பதிவு எந்தமாதிரியும் இருக்கலாம்..ஆனால் ஈழம் என்று பொதுவில் வரும்போது எங்கள் தனித்துவத்தை பாதுகாப்பது அவசியம் என நினக்கிறேன் :(((

தனிப்பட்ட கருத்துத்தான்..தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..

Saturday, November 19, 2011

இரசித்த இருகுரல் ஒரு பாடல்


எஸ்.பி.பி ஜானகி அம்மா இணைக்குரலில் உருகும் பல பாடல்களில் நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..

கலைஞர் தொலைக்காட்சியில் பாடிய ஒரு குழந்தைக்கு விமர்சனம் செய்யும்போது பாடகி அனுராதா ஸ்ரீராம் சொன்ன ஒரு விடயம் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது..அதாவது பாடும்போது குரலில் சரியான உணர்வுகளைக்காட்டும் திறமை இயற்கையிலேயே சிலருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம். உண்மைதான் போலும்..

அத்தகைய வரம் பெற்றவர்களில் எனக்கு மிகவும் பிடித்த இணைக்குரல்கள் எஸ்.பி.பி,ஜானகி அம்மா...

ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி
மனமே உன்னையே நின்னையே எண்ணியே
என் சுவாசம் யாவும் நீயே
என் வாசல் வழி வருவாயே மௌனம் ஏன்

இந்த மூன்றோ நான்கு வரிகளுக்கும் என்னவொரு உணர்வுபூர்வமாக எஸ்.பி.பி குரல் கொடுத்திருக்கிறார் என்பது பாடலை அனுபவித்துக்கேட்டவர்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்...

என்ன தான் அருமையான பாடும் திறமை குரல் வளம் இருந்தாலும் பின்னணி இசையை விட்டுப்பார்த்தால் பாடலின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல தான் இருக்கும்...சில வரிகளுக்கு பின்னால் குழுக்குரலாக ஒலிக்கும்"ம்ம்ம்" கேட்பவர்கள் அதிகம் கவனிக்காவிட்டாலும் பாடலுக்கு பின்னே இருந்து அழகு சேர்க்கிறது என்பதே உண்மை...

"மௌனம் ஏன்" என மெதுவாக முடிக்க பின்னணி இசை உதவிக்கு வந்து ஒலித்து ஓயும் இடம் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று.."மௌனம் ஏன்" இழுவை தவிர்த்து சடுதியாக நிறுத்தியிருந்தால் பாடல் வரியின் உணர்வு அழகு எல்லாமே கொஞ்சம் சிதைந்தே போயிருக்கும் என்பது என் கருத்து..பாடலின் சந்தர்ப்பம் சூழல் வரிகள் சொல்லும் உணர்வுகள் அறிந்து அதற்கு ஏற்றால் போல இசை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் குறிப்பாக இந்தப்பாடலில் தேவாவின் பின்னணி இசை பாராட்டப்படவேண்டியதுதான்..

எஸ்.பி.பி க்கு சளைக்காதவராக இதே வரிகள் பெண்குரலாக ஜானகி அம்மா பாடுவதும் கொள்ளை அழகுதான்,...

ஆண் குரலில் "மௌனம் ஏன்" என்று வந்த வரிகள் பெண் குரலில் "மன்னவா" என்று ஜானகி அம்மா உருகும் அழகை நீங்களும் ஒருதடவை உருகி கேட்டுப்பாருங்கள்.:)

பாடல் வரிகள் வைரமுத்து போல தெரிகிறது..தவறென்றால் தெரிந்தவர்கள் திருத்திவிடுங்கள்..:)

முழுப்பாடலும் அழகாக இருந்தாலும் அந்த எடுப்பின் இசை+வரிகள் என்னை மிகவும் கொள்ளை கொண்டதால் அவற்றைப்பற்றி மட்டுமே கதைத்திருக்கிறேன்...

இந்தபாடலின் இசை இளையராஜா இல்லை என்பதால் இளையராஜா இசை அளவுக்கு தேவா எனக்கு நெருக்கம் இல்லை என்பதால் என் அபிமான பாடகர் எஸ்.பி.பி மீது ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது..அவராவது பாடும்போது "ஓ ராகினி"ற்கு பதிலாக "ஓ ஹாசினி "என்று பாடியிருக்கலாம் இல்லையா?:P:Pசந்தம் அழகாகத்தானே பொருந்திவருகிறது,..:P :))))


இதுவரைக்கும் பாடலை வீடியோ இல்லாமல் தான் கேட்டிருக்கிறேன்.இந்தப்பாடலை இப்போது இங்கே இணைக்கமுடியவில்லை:(குறிப்பிட்ட இணைப்பில் சென்று கேட்டுப்பாருங்கள்..

இந்த கொலைக்களத்தில் மாட்டி யாரும் உடல் உள்ளம் நொந்துபோனால் அதற்கு ஹாசினி பொறுப்பல்ல..வலைப்பூ வாசலிலேயே எச்சரிக்கைப்பலகை மாட்டித்தான் வைத்திருக்கிறேன்..:))))











Sunday, October 23, 2011

அன்னைக்கோர் பதிவாஞ்சலி

இலங்கையிலுள்ள எனக்குத்தெரிந்த ஒரு சில அம்மன் ஆலயங்களை மனதில் வைத்து இந்த கிறுக்கலை வரைந்திருக்கிறேன்..ஆம் என் கிறுக்கல் தொல்லையில் இருந்து என் தாயும் தப்பவில்லை என்பது உங்களுக்கு வருத்தம் தரலாம்.பிள்ளையின் தொல்லையை அன்னை பொறுப்பாள் தானே..:)

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அன்னையாக அகிலத்தை ஆளும் என் தாய் அகிலாண்ட ஈஸ்வரிக்காக இந்தப்பதிவு...


பன்றியின் தலை தந்து
பக்தனை காத்த
பன்றித்தலைச்சி தாயே
மட்டுவிலூர் வாழும் மாரியும் நீயே
மலை சூழ் மாத்தளையின் முத்துமாரி தாயே
மனமிரங்க மாட்டாயோ 
மனக்குறைதான் தீராயோ
சிட்டிவேரம் வாழும் என் சிவகாம சுந்தரியே
வலிக்கும் வரை நடந்துவிட்டேன் 
வழி எதுவும் தெரியவில்லை
வந்திடம்மா வழித்துணையாய் என் பகவதித்தாயே
கருணையூர் வாழும் கருணைக்கடலே
புவனத்தை ஆளும் ஈஸ்வரி நீயே
கருணையூர் குடிகொண்ட புவனேஸ்வரித்தாயே
கண் திறந்து பாராயோ
கருணையது பொழியாயோ
அல்லல் தீர்க்க வந்திடம்மா
அல்வாயூர் முத்துமாரி தாயம்மா
அலைகடல் சூழ் நயினைதன் கரையிலமர்ந்தவளே
அரவக்குடைகொண்ட என் நாகபூசணி தாயே
உனை வேண்டிப்பாடுகிறேன் ஒயாது இங்கு
ஓடிவரமாட்டாயோ என் தாயே நீயிங்கு

பாமாலை நிதமுனக்கு சூட்டினேன் என் தாயே
பூவிழி மலர்ந்து பாராயோ உன் மகளை
அன்றாடம் உன்னருளை
மன்றாடி வேண்டினேன்
அன்பு மழை பொழியாயோ
என் அன்னையே அபிராமியே

உன் அன்பு வேண்டும்
எப்போதும் எனக்கிங்கு
கலக்கமிங்கு எனக்கேது
கலங்கரை விளக்கமாய்
காளியே நீயிருக்க
ஒரு காலும் மறவாது
உனை நினைக்கும் வரம் வேண்டும்
தாழாத உன் அன்பு
எப்போதும் உடன் வேண்டும்
இது போதும் தாயே
உந்தன் பேரன்பு
இது போதும் எனக்கு

இப்போது இந்தக்கணம் என் மனதை ஆட்கொண்டுகொண்டிருக்கும் பாடல் கொல்லூர் மூகாம்பிகை தாய் மீது பாடப்பட்ட மலையாளமொழிப்பாடல்.இப்பாடலையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.




Saturday, October 22, 2011

தாலாட்டு பாடல்கள்

சிறிய வயதில் தாயின் தாலாட்டை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்..என் தாயும் பாடியிருப்பார்.ஆனால் எனக்கு அப்படியான நினைவுகள் எதுவும் ஞாபகத்தில் இல்லை.இங்கு நான் சொல்லவரும் தாலாட்டு பெரியவர்களான பிறகும் நம்மில் பெரும்பாலோனோர் இசையின் தாலாட்டுடன் தான் வாழ்கிறோம் அந்த தாலாட்டில் தான் உறங்குகிறோம்.இங்கு நான் ரசித்த மனதுக்கு இதமான என்னை உறங்கவைக்கும் தாலாட்டுகளில் தற்சமயம் ஞாபகம் வந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்..

ஓ பாப்பா லாலி பாட்டிலேயே "லாலி" வருகிறது.ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான பின்னணி இசை அன்பை பிழிந்து தரும் வார்த்தைகள் அவற்றை உணர்ந்து பாடும் மனோவின் இனியகுரல்..யாருக்கு தான் இந்த தாலாட்டு பிடிக்காமல் போகும்..

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தை தான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

இதை காப்பதும் என்றும் பார்ப்பதும் இந்த தாய் மனமே

தன் காதலனோ கணவனோ துன்பத்தில் துவளும்போது தாயாக மாறும் பெண்மனம் துன்பம் தனைத்தாக்கும்போது தன் உறவிடமிருந்து தாயன்பை எதிர்பார்த்து நிற்கும்.தாயுள்ளம் படைத்த கணவன் கிடைத்தால் ஒரு பெண்ணுக்கு அதைவிட வேறு என்ன பாக்கியம் இருக்கமுடியும்.

பேரன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளோடு இசைஞானியின் அற்புதமான இசை சேர்ந்து காதில் பாயும்போது பேரிரைச்சலோடு ஆர்ப்பரிக்கும் மன அலைகள் கூட அடங்கி ஓய்ந்துவிடாதா என்ன...




"ஆகாசவாணி நீ தான் என் ராணி சோஜா சோஜா சோஜா தாய் போல நானே  தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா"

இந்தப்பாடலிலும் அதே தாயன்பு இருக்கிறது..உணர்வுகளை குரலில் வெளிப்படுத்துவதில் பாலசுப்ரமணியத்துக்கு அடுத்ததாக எனக்கு பிடித்தவர் ஹரிகரன்...

இந்தப்பாடலில் அதிகம் பிடித்த வரிகள் "அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா" டியர் டார்லிங் செல்லம் பட்டு என எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் "அம்மா" என்ற வார்த்தையில் ஏதோமாயமந்திரம் கலந்த ஒரு அன்பு இருப்பது போல் ஒரு உணர்வு..

அம்மா என்ற வார்த்தையே அன்பின் வடிவமாக இருப்பதாலோ என்னவோ அம்மா என்று யாரும் அழைத்தால் ஆழமான அன்பை உணர்கிறேன்..

எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் உணர்வுகளை புரிந்து உயிருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் வெகுசிலராக தான் இருப்பார்கள்..
"உயிருக்கு அருகினில் இருப்பது நான்  தானே இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே "

எல்லாவற்றுக்கும் மேலாக சந்தர்ப்பம் அறிந்து தேவா தந்த அற்புதமான மெல்லிசைதான் இந்தப்பாடலின் அடி நாதம்..
 

5 பாடல்கள் போடலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால் பதிவின் நீளம் கூடுவது போல் இருப்பதால் இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொள்(ல் :P))கிறேன்..

twitter ல் ஒரு பாட்டுக்கு 5 tweets வீதம் இரண்டு பாட்டுக்கும் 10 tweets போட்டு பின் தொடர்பவர்களை கொல்லாமல் ஒட்டுமொத்தமாக பதிவிடுதல் நலம் என நினைக்கிறேன்..விரும்பியவர்கள் மட்டும் கொலைக்களத்தில் மாட்டலாம் இல்லையா..:)