கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு பதிவை என் வலைப்பக்கத்தில் இட்டேன்.அதனால் அடுத்த பதிவை கொஞ்சம் இளைப்பாறிவிட்டு எழுதலாமே என்று யோசித்தபோது தான் என் மனக்கண்ணில் வந்து நின்றது ஜுன் 2.ஆம்..அன்று என்ன விசேசம் அப்படி??ஏதாவது நினைவு தினமா?மகளிர் தினம்..குழந்தைகள் தினம்..ஆண்கள் தினம்(;))....இல்லை.எங்கள் இசை ஜாம்பவான்,இசை ராஜா, இசை ஞானி,பண்ணைபுரம் தந்த இசைக்குயில் இளையராஜா இந்த பூமியில் உதித்த தினம்.
ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் இசையமைப்பாளர் பற்றிய அறிவு இல்லாத சின்ன வயதிலிருந்தே பாடல்கள் கேட்பதில் பாடுவதில் எனக்கு தனிப்பிரியம் இருந்தது.அதிலேயும் ஒரு குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு சிலிர்ப்பு எனக்குள் இருக்கும். காலப்போக்கில் தான் புரிந்துகொண்டேன் அந்தப்பாடல்கள் எல்லாமே இசைஞானியுடையது என்று.மனது பாரமாக இருக்கும் சில நேரங்களில் ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்து தரமுடியாத ஆறுதலை இசைஞானியின் சில பாடல்கள் தந்திருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மேடை இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இளையராஜா பேசும்போது "உங்கள் இசைக்காக உயிரை கூட தர தயாராக இருக்கிறோம் என்று சில ரசிகர்கள் தொடர்புகொண்டு சொன்னதாக அதில் குறிப்பிட்டிருந்தார்."..ஆம்..அவ்வாறு உங்களை தொடர்புகொண்டு சொன்னவர்கள் ஒரு சிலர் மட்டுமே.ஆனால் உலகமெங்குமே இன்னும் என்னைப்போல எத்தனையோ ரசிகர்கள் உங்கள் இசையை உயிராக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரே ஒரு மனவருத்தம் இருக்கிறது.முன்பு போல் தமிழ் திரையுலகில் உங்கள் பாடல்களை அதிகம் காணமுடியவில்லை.இயக்குனர்கள் உங்கள் இசையை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் இழப்பு உங்களுக்கல்ல..தமிழ் திரையுலகுக்கும் என்போன்ற ரசிகர்களுக்கும் தான்...
என்றும் வாழும் இசை முத்துக்கள் தந்த எங்கள் ராகதேவன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எங்கள் இசை மன்னனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
எங்கள் இசைஞானிக்கு என்னுடைய கிறுக்கல் ஒன்றை அன்புப்பரிசாக வழங்கலாம் என்று நினைக்கிறேன்.
அதிகாலை நேரமென்ன
அந்திசாயும் நேரமென்ன
எந்தன் உள்ளம் நாடும்
இன்னிசை நாதமது
உந்தன் இசை மெட்டன்றி
வேறேதும் உண்டோ
துள்ளிக்குதிக்கும் நேரங்களில்
துள்ளி வருவதும் உந்தன் இசை தான்
கண்கள் பனிக்கும் நேரங்களில்
உயிரோடு உருகுவதும்
உந்தன் இசை அன்றோ
அறியாத வயதில் கேட்ட
அன்னையின் தாலாட்டு
எந்தன் நினைவில் இல்லை
"ஓ..பாப்பா... லாலி"-என உருகும்
உந்தன் மெல்லிசை தாலாட்டில்
உறங்கிய நாட்கள் எத்தனையோ
ஆயிரம் மன்னர் வந்தாலும்-சோழகுல
ஆதவன் ராஜராஜன் அன்றோ-அது போல்
ஆயிரம் பேர் வந்தாலும்-எம்
இசை நாதன்-தமிழ்
இசை ராஜராஜன்-எங்கள்
இளையராஜனன்றோ...
சொல்லிக்கொண்டே போனால்
சொற்கடல் கூட
வற்றிவிடக்கூடும் தமிழில்
உன் பெருமை சொல்ல
ஒரு கோடி வார்த்தைகளை
ஒன்றாக திரட்டினாலும்
என்னால் முடியாதையா
தென்னவனே
இசை மன்னவனே-தமிழ்
இசை வல்லவனே-இசை வெள்ளமதில்
உயிர் கொன்றவனே-எம்
இராக தேவனே
நீ வாழ்க
உன் இசை வாழ்க
ஆண்டாண்டு காலம்
அழியாப்புகழ் கொண்டு வாழ்க