Friday, December 10, 2010

மனம் கவர்ந்த நாயகன்

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களால் பதிவுலகில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.எழுதி எழுதி மட்டுமல்ல எழுதாமல் மௌனமாக இருந்து கூட உங்களை கொல்ல முடியும் என்று நிரூபிப்பதற்காக தான்  என்று  வைத்துக்கொள்ளுங்களேன்.:P (நீ எழுதவில்லை என்று இங்கு யார் கவலைப்பட்டார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும்  கேட்கிறது.சரி.விடுங்கள்.தனிப்பட்ட ரீதியில் அதை பேசித்தீர்த்துக்கொள்வோம்.;)

பதிவு எழுதியே ஆகவேண்டும் என்று யாரும் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கூட "முடிந்ததை செய்துகொள்ளுங்கள்" என்று என்வழியில்  போய்க்கொண்டே இருந்திருப்பேன்.என் அபிமானப்பதிவர்களில் ஒருவர் மணிமேகலா.பதிவுலகில் என் அன்புத்தோழியும் கூட.அவர் விடுத்ததோ பதிவு  எழுதியே ஆகவேண்டும் என்ற அன்பு மிரட்டல்.வேறு வழியில்லை.பணிந்துவிட்டேன் தோழி உங்கள் அன்புக்கு.:)


நீண்டகாலமாக பதிவு எழுதாதனால் எழுத நினைத்தால் ஆயிரத்தெட்டு தலைப்பு மனதுக்குள் வந்து நிற்கிறது. :)அதில் ஒன்றை இப்போது தெரிவுசெய்து எழுதுகிறேன்.எத்தனையோ திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன்.சில படங்களில் வரும் கதாபாத்திரங்களை  இரசித்துப்பார்த்திருக்கிறேன்.ஆனால் சினிமாவில் வரும்  நாயகர்கள் எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நாயகனாக இருப்பதுபோன்ற மன  உணர்வு அடிக்கடி என் மனதில் தோன்றும்.அதனால் நல்ல கதையம்சம் உள்ள பொழுதுபோக்கான திரைப்படங்கள் வரும்போது படத்தை ரசிப்பதோடு  மட்டும் நிறுத்திக்கொள்வேன்.எந்த சினிமா நாயகன் மீதோ நாயகி மீதோ தனிப்பட்ட அபிமானத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. யாரும்  வெள்ளித்திரை என்ற மாயையை தாண்டி அப்படி என் மனதை பெரிதாக கவரவும் இல்லை...:).ஆனால் எத்தனையோ அடி திரையரங்கில் எத்தனையோ  வர்ணஜாலங்கள் காட்டி கவரமுடியாத என் மனப்போக்கை வெறும் எழுத்துக்களால் ஆட்டிப்படைத்துவிட்டார் எழுத்தாளர் அமரர் கல்கி தன்  பொன்னியின் செல்வன் என்ற நாவலில்.நீங்கள் பொன்னியின் செல்வன் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இந்தப்பதிவை தொடர்ந்து வாசித்துச்செல்ல அந்த நாவல் படித்த அனுபவம் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தப்பதிவை பொன்னியின் செல்வன் நாவல் பற்றிய விமர்சனம் என்று யாராவது பிழையாக விளங்கிக்கொண்டு ஏமாந்துபோனால் அத்ற்கு நான்  பொறுப்பல்ல.:).இந்த பதிவு நாவலின் நாயகன் பேரரசன் இராஜராஜ சோழன் பாத்திரத்தைப்பற்றியது மட்டுமே.கல்கியின் எழுத்துக்களோடு என்றோ  ஒரு காலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள் என்ற நினைப்பும் தான் இந்த பாத்திரத்தில் அளவுகடந்த அபிமானத்தை எனக்கு  ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறேன்.சரித்திர ஆராய்ச்சியின் அடிப்படையிலே தன்னுடைய கற்பனை வர்ணனை திறமைகளையும் சேர்த்து  கல்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.அவர் குறிப்பிட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் என் அபிமான நாயகனின் புகழ்பாட  இருக்கிறேன்.


இளம் வயதிலேயே எதிரிப்படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு வீரன்,தேவர்களை நிகர்த்த அழகுடைய ஒரு அரசிளங்குமாரன், பல தேசங்களை  ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதிமன்னன் இவை போதாதா அருண்மொழிவர்மனை அனைவருக்கும் பிடித்துப்போவதற்கு. ஆம்.இந்த அடிப்படைதகுதிகளை  தாண்டி பல குண இயல்புகளை கல்கி தன் நாவலினூடு சொல்லிச்செல்கிறார்.உண்மையைச்சொன்னால் பொன்னியின்செல்வன் நாவல் ஒரு தடவை மட்டும் தான்  முழுமையாக வாசித்திருக்கிறேன்.ஆனால் எனக்குப்பிடித்த காட்சிகள் கட்டங்களை திரும்பதிரும்ப வாசித்து மகிழ்வேன்.அவற்றை விலாவாரியாக  விளக்கிச்சொல்வற்கு தொடர்பதிவு தேவையென்பதால் இந்தப்பதிவில் பொன்னியின் செல்வரை மட்டும் என்னோடு அழைத்துவருகிறேன்.

கல்கி பொன்னியின் செல்வரை அறிமுகம் செய்யும் இடத்திலேயே "இந்த கதைக்கு பெயர் தந்த அரசிளங்குமாரரை தமிழகத்தின் சரித்திரத்திலேயே ஈடு இணைசொல்லமுடியாத வீரரை....."என்றவாறான வர்ணனை மூலமாக இராஜராஜ மன்னனை  எங்கள் உள்ளத்தில் செதுக்கிவிடுவார்.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பொன்னியின் செல்வரை சந்திக்க இலங்கை வரும் காட்சியில் போர் நடந்த அனுராதபுரம் போன்ற இடங்களில் கூட  மக்கள் போர் நடந்ததற்கான சுவடுகள் எதுவுமே இல்லாது களிப்புடன் இருப்பதாக கதையில் காட்டியிருக்கிறார் கல்கி.இன்னொரு நாட்டுக்கு  எதிராகவோ இல்லை இன்னொரு தேசத்துக்கு எதிராகவோ போர் செய்யும்போது என்னென்ன தந்திரோபாயங்களை பாவித்து எதிரிகளை வீழ்த்தலாம் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதோடு  பொதுமக்கள் அப்பாவிகளை கணக்கில் எடுக்காத மன்னர்கள், தலைவர்கள் மத்தியில் மக்கள் நலனையும் கருத்தில் கொண்ட நீதி  நேர்மை கருணை  உள்ளம் கொண்ட ஒருவனாக பொன்னியின் செல்வர் தனித்துத்தெரிகிறார்.

இன்னொரு காட்சியில் எதிரிகளின் பிடியில் இருந்த சிம்மகிரி கோட்டைக்கு மாறுவேடத்தில் சென்று அங்குள்ள சித்திரங்களை ரசித்ததாக  நாவலில் வருவது மன்னனின் அளவுகடந்த கலை ஈடுபாட்டையே காட்டுகிறது.கலைகளை ரசிக்காத மனங்கள் தான் ஏது சில விதி  விலக்குகளைத்தவிர.இந்தக்காட்சி வெறும் கற்பனையாக இருந்தால் கூட இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயே புகழ்பெற்ற சிற்பவேலைப்பாடுகள்  கொண்ட தஞ்சைப்பெரியகோயில் நிர்மாணிக்க காரணமாக இருந்த மன்னன் கலாரசனை இல்லாதவனாக இருந்திருப்பானா என்ன.இயல்பிலேயே கலைகளை  இரசிக்கும் இயல்பு கொஞ்சம் அதிகமென்பதாலோ என்னவோ அவ்வாறு இரசனை உள்ளம் கொண்டவர்களிலும் பிரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்..:)

தந்தையார் மக்கள் என அனைவரினதும் ஏகோபித்த ஆதரவு இருந்தும் வயதில் மூத்த தன் சிறிய தந்தைக்கு முடிசூட்டுவதே முறை என்று தன்னுடைய  சிம்மாசனத்தையே தியாகம் செய்ய தயாராக இருந்த அந்த மன்னனுக்கு நிகராக யாரை ஒப்பிடலாம் சொல்லுங்கள்.எல்லோருடைய எதிர்ப்பு இருந்தாலும் அடுத்தவனை கொன்றுபோட்டாவது நானே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் பொன்னியின் செல்வனின் பெருந்தன்மையைக்  கோடிட்டுக்காட்டி எங்களையும் மயக்கிவிட்டார் கல்கி.வெறுமனே தியாகம் செய்ய தயாராக இருந்தது  மட்டுமல்ல சொல்லியதுபோலவே அவரின் சிறிய  தந்தையின் ஆட்சிக்காலத்தின் பின்னரே அருண்மொழிவர்மன் முடிசூட்டியதாக சரித்திரம் சொல்கிறது.


இவை மட்டுமல்ல சிறந்த ஒரு பக்திமானாகவும் கல்கி பொன்னியின் செல்வரை காட்டியிருக்கிறார்.தஞ்சைப்பெரியகோவிலே அதற்கு மிகப்பெரிய  வரலாற்றுச்சான்று. இயல்பாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள் என்பதால்  இராஜராஜ சோழன் சிறந்த பக்திமானாக கூட விளங்கியிருக்கிறான் என்பது அந்த  பாத்திரத்தின் மேல் எனக்கிருந்த காதலை அதிகரிக்கச்செய்வதாகவே இருக்கிறது.சிவபக்தனாக இருந்தால்கூட  ஏனைய மதத்தவர்களையும் குறிப்பாக பௌத்த மதத்தை பெரிதும் ஆதரித்ததாக கல்கி சொல்லிச்செல்கிறார்.

ஒரு இடத்தில் பொன்னியின் செல்வனை பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்பற்றி எதிர்க்கருத்து உள்ளவர்கள் கூட அவர் முகத்தை பார்க்கும்போது  எதிர்க்கும் தைரியத்தை இழந்துவிடுவதாகச்சொல்கின்ற கல்கியின் வர்ணனை எனக்குப்பிடித்த ஒன்று. இங்கே நான் தவறவிட்ட சில விடயங்கள் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.ஞாபகத்தில் வந்த விடயங்களை மட்டும் பதிவில் உள்ள்டக்கியிருக்கிறேன்.


இத்தனை அழகு,ஆற்றல் குணாதிசயங்கள் நிரம்பிய பொன்னியின் செல்வர் என் மனதை கவர்ந்ததில் அதிசயம் ஏதும் இருக்கிறதா சொல்லுங்கள்..இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச்சென்று வாழ்ந்துபார்க்கத்தோன்றும்.அந்த மன்னனின் காலத்தில் நாட்டின் அடிமட்ட குடிமகனாகவோ குடிமகளாகவோ தன்னிலும் பிறந்திருந்திருக்க மாட்டேனோ என்ற ஆதங்கம் எனக்குள் எழாமல் இல்லை.


ஏற்கனவே இராஜராஜ மன்னனின் சரித்திரத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படமாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.இப்போது இயக்குனர் மணிரத்னம் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்.இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் இரசிகை என்ற அடிப்படையில் எனது கருத்து நாவலை படமாக எடுப்பதை தவிர்ப்பதே நல்லது என்பது தான் .நாவலை வாசிக்கும்போது எங்கள் இரசனைக்கு ஏற்றவகையில் ஒரு கதாபாத்திரத்தை தோற்றத்தை கற்பனை செய்து வைத்திருப்போம்.அதுவே படத்தில் கொஞ்சம் முரணாகும்போது அதனை முழுமையாக ரசிக்கமுடியாமல் போய்விடும்.அத்தோடு கதையில் வரும் வர்ணனைகள் கொண்ட இட காட்சி அமைப்பை படத்தில் கொண்டுவரமுடியுமா என்றால் சந்தேகம் தான்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்.

Thursday, June 3, 2010

பாடும் நிலாவுக்கு ஒரு வாழ்த்து

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொல்வார்கள்.ஆனால் இந்த வைகாசி மாதத்தில் கூட பல விசேசங்கள் இருக்கிறது போல தெரிகிறது.இப்போது இணையத்தை மேயும்போது தான் அறிந்துகொண்டேன் எங்கள் பாடும் நிலாவின் பிறந்த நாள் ஜுன் 4 இன்று என.இசைஞானியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முற்றாக ஓய்ந்துவிடாத நிலையில் அடுத்த கொண்டாட்டம் இது.இசைஞானியின் இன்னிசைக்கு தன் இனிமையான குரலினாலும் அந்த குரலில் காட்டும் அற்புதமான நடிப்பாலும் மேலும் மெருகூட்டியவர் எங்கள் எஸ்.பி.பி அவர்கள்.



நடிப்புலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் என்றால் குரல் நடிப்பில் சூப்பர்ஸ்டார் எங்கள் எஸ்.பி.பி தான்.எத்தனை எத்தனை விதமான பாடல்கள் அந்த கின்னஸ் சாதனை மனிதரின் பெருமைகளை இங்கே எடுத்துச்சொல்ல எனக்கு அறிவும் போதாது பதிவில் இடமும் போதாது.


என் விருப்பப்பாடல்கள் பட்டியலில் பெரும்பான்மையானவை இவருடைய பாடல்கள் தான்.அதிலும் தேர்ந்தெடுத்த சில பாடல்களை இந்தப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.எங்கள் பாடும் நிலா நூறாண்டு காலம் வாழவேண்டும் என அவரின் அன்பு ரசிகர்கள் சார்பில் என் வாழ்த்துக்களை எங்கள் குரல்வேந்தனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பாடல்களுக்கு எந்த விளக்கமும் தராவிட்டாலும் கூட எஸ்.பி.பி யின் குரல் பாவங்களே அத்தனை விளக்கங்களையும் தந்துவிடாதா என்ன..

பிரியங்கா படத்திலிருந்து இசைஞானியின் அற்புதமான இசையில் "வனக்குயிலே"



ஏக் துஜே கேலியே படத்திலிருந்து லக்ஸ்மிகாந் பியரிலாலின் இனிய இசையில் "தேரே மேரே"



அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த பாடல் இது.இசை நிகழ்ச்சியில் அவர் பாடியதை இங்கே கேட்க தேரே மேரே

தென்றலே என்னைதொடு படத்திலிருந்து இசைஞானியின் இனிய இசையில் "கவிதை பாடு குயிலே"



மௌனராகம் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் "மன்றம் வந்த தென்றலுக்கு"

Monday, May 31, 2010

அன்புள்ள ராஜாவுக்கு

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு பதிவை என் வலைப்பக்கத்தில் இட்டேன்.அதனால் அடுத்த பதிவை கொஞ்சம் இளைப்பாறிவிட்டு  எழுதலாமே என்று யோசித்தபோது தான் என் மனக்கண்ணில் வந்து நின்றது ஜுன் 2.ஆம்..அன்று என்ன விசேசம் அப்படி??ஏதாவது நினைவு தினமா?மகளிர் தினம்..குழந்தைகள் தினம்..ஆண்கள் தினம்(;))....இல்லை.எங்கள் இசை ஜாம்பவான்,இசை ராஜா, இசை ஞானி,பண்ணைபுரம் தந்த இசைக்குயில் இளையராஜா இந்த பூமியில் உதித்த தினம்.


ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் இசையமைப்பாளர் பற்றிய அறிவு இல்லாத சின்ன வயதிலிருந்தே பாடல்கள் கேட்பதில் பாடுவதில் எனக்கு தனிப்பிரியம் இருந்தது.அதிலேயும் ஒரு குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு சிலிர்ப்பு எனக்குள் இருக்கும். காலப்போக்கில் தான் புரிந்துகொண்டேன் அந்தப்பாடல்கள் எல்லாமே இசைஞானியுடையது என்று.மனது பாரமாக இருக்கும் சில நேரங்களில் ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்து தரமுடியாத ஆறுதலை இசைஞானியின் சில பாடல்கள் தந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மேடை இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இளையராஜா பேசும்போது "உங்கள் இசைக்காக உயிரை கூட தர தயாராக இருக்கிறோம் என்று சில ரசிகர்கள் தொடர்புகொண்டு சொன்னதாக அதில் குறிப்பிட்டிருந்தார்."..ஆம்..அவ்வாறு உங்களை தொடர்புகொண்டு சொன்னவர்கள் ஒரு சிலர் மட்டுமே.ஆனால் உலகமெங்குமே இன்னும் என்னைப்போல எத்தனையோ ரசிகர்கள் உங்கள் இசையை உயிராக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரே ஒரு மனவருத்தம் இருக்கிறது.முன்பு போல் தமிழ் திரையுலகில் உங்கள் பாடல்களை அதிகம் காணமுடியவில்லை.இயக்குனர்கள் உங்கள் இசையை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் இழப்பு உங்களுக்கல்ல..தமிழ் திரையுலகுக்கும் என்போன்ற ரசிகர்களுக்கும் தான்...


என்றும் வாழும் இசை முத்துக்கள் தந்த எங்கள் ராகதேவன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு  இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எங்கள் இசை மன்னனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எங்கள் இசைஞானிக்கு என்னுடைய கிறுக்கல் ஒன்றை அன்புப்பரிசாக வழங்கலாம் என்று நினைக்கிறேன்.

அதிகாலை நேரமென்ன
அந்திசாயும் நேரமென்ன
எந்தன் உள்ளம் நாடும்
இன்னிசை நாதமது
உந்தன் இசை மெட்டன்றி
வேறேதும் உண்டோ

துள்ளிக்குதிக்கும் நேரங்களில்
துள்ளி வருவதும் உந்தன் இசை தான்
கண்கள் பனிக்கும் நேரங்களில்
உயிரோடு உருகுவதும்
உந்தன் இசை அன்றோ

அறியாத வயதில் கேட்ட
அன்னையின் தாலாட்டு
எந்தன் நினைவில் இல்லை
"ஓ..பாப்பா... லாலி"-என உருகும்
உந்தன் மெல்லிசை தாலாட்டில்
உறங்கிய நாட்கள் எத்தனையோ
 
ஆயிரம் மன்னர் வந்தாலும்-சோழகுல
ஆதவன் ராஜராஜன் அன்றோ-அது போல்
ஆயிரம் பேர் வந்தாலும்-எம்
இசை நாதன்-தமிழ்
இசை ராஜராஜன்-எங்கள்
இளையராஜனன்றோ...

சொல்லிக்கொண்டே போனால்
சொற்கடல் கூட
வற்றிவிடக்கூடும் தமிழில்
உன் பெருமை சொல்ல
ஒரு கோடி வார்த்தைகளை
ஒன்றாக திரட்டினாலும்
என்னால் முடியாதையா

தென்னவனே
இசை மன்னவனே-தமிழ்
இசை வல்லவனே-இசை வெள்ளமதில்
உயிர் கொன்றவனே-எம்
இராக தேவனே
நீ வாழ்க
உன் இசை வாழ்க
ஆண்டாண்டு காலம்
அழியாப்புகழ் கொண்டு வாழ்க

Thursday, May 27, 2010

புலம்பெயர் உறவுகளும் புதைந்திருக்கும் மன உணர்வுகளும்

எம் புலம்பெயர் உறவுகளின் மன உணர்வுகளை ஏக்கங்களை வெளிப்படுத்தும் பாடல் தொகுப்பாக எங்கள் மூத்த பதிவர் கானா பிரபா அண்ணாவின்
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ பதிவு அமைந்திருந்தது.பாடல்களாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.அந்தப்பதிவை வாசிக்கும்போது நகைச்சுவை உணர்வோடு அதை வாசிக்க முயற்சித்தபோதும் ஏதோ ஒரு பாரம் நெஞ்சை நிறைத்தது உண்மைதான்.

இங்கு நான் அறிந்த தெரிந்த விடயங்களை சம்பவங்களை அடிப்படையாக வைத்து  இந்தப்பதிவை எழுதுகிறேன்.இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.இந்தப்பதிவுகள் எல்லாமே என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மட்டுமே.எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.அதற்காக ஹிட் பதிவை கொடுக்கவேண்டுமென நினைத்து எந்த பதிவையும் நான் இதுவரைக்கும் எழுதவில்லை.இனியும் எழுதப்போவதுமில்லை.எனது கடந்த ஒரு பதிவுக்கு
மிகவும் கீழ்த்தரமான முறையில் முகப்புத்தகத்தில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.அதற்கு எனது நெருங்கிய நண்பர் ஒருவரும் ஆமோதித்து கருத்து கூறியிருந்தார் என்பது மனவருத்தத்துக்குரிய விடயம் தான்.அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க,நாங்கள் விடயத்துக்கு வருவோம்.
வெளி நாடு என்றதுமே எங்கள் எல்லோருடைய நினைப்பும் அது என்னவோ செல்வம் கொழிக்கும் சொர்க்க பூமி என்று தான்.ஆனால் உண்மை அதுவல்ல என்பது எம் உறவுகளின் கருத்துக்களை கேட்கும்போது தெரிகிறது.என்ன தான்  வசதியாக இருந்தாலும் சொந்த பந்தங்களை பிரிந்து தனிமையே துணையென இருக்கும் அந்த வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு சொர்க்கமாக இல்லை என்பதே எனது கருத்து.

எம்மவர்களிடம் தாராளமாக புழங்குவது, தாராளமாக புழங்கும் வார்த்தையும் கூட இது "வெளிநாட்டு காசு".எம்மவர்கள் சொல்வார்கள் "அவன் இலண்டனில் மாதம் 5 லட்சம் உழைக்கிறான்.அவர்களுக்கென்ன.."என்று.
இந்த வெளி நாட்டு பணம் எல்லாம் பெரிய தொகையாக எம்மை வந்து சேர்வது நாணயமாற்று வீதத்தால் மட்டுமே.அங்கே அவர்களின் அந்த வருமானம் சிலவேளைகளில் அவர்களின் செலவுக்கே போதுமானதாக இருக்காது.இந்த அடிப்படையை எம்மில் பெரும்பாலோனோர் குறிப்பாக மூத்த தலைமுறையினர் புரிந்துகொள்வது குறைவு என்பதே எனது கருத்து.அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துச்சொல்லாமல் விடுவது எம் தவறும் கூடத்தான்.அதை விட வருத்தத்துக்குரியது எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களை பணம் கொட்டும் இயந்திரமாகப்பார்ப்பதுதான்.எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் திருமணம் முடித்து வெளி நாடு ஒன்றுக்கு சென்றார்.குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் தந்தை இல்லாத குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு மட்டுமல்ல தனது தங்கைகளை கரைசேர்க்கவேண்டிய பொறுப்பும் அந்த பெண்ணுக்குக்குத்தான்.தனது படிப்பையும் அங்கே தொடர்ந்து கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து என்று கடினமான வாழ்க்கையை தான் அந்தப்பெண் வாழ்கிறார்.இத்தனைக்கும் அவரின் சகோதரிகள் இங்கே சந்தையில் புதிதாக வரும் ஆடம்பர உடைகளை உடுத்துவதும் அழகு பார்ப்பதும் என்று அவர்களின் தரமே வேறு.இது குறிப்பிட்ட ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான்.அங்கே அவர்கள் இரவு பகலாக உழைத்து பணத்தை அனுப்ப இங்கே உள்ளவர்கள் அதை எவ்வாறு செல்வழிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

சில நாடுகளை எடுத்துக்கொண்டால் படித்த படிப்புக்கு அங்கே வேலை எடுப்பது கடினம் என்பதால் மூளைக்கு வேலையெதுவும் அற்ற படிப்புக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எம் இளைஞர்களுக்கு.என்னதான் வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களின் உள்மனதில் ஏதோ ஒரு வகையில் உளவியல் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
 

கடந்த வருட பொருளாதார நெருக்கடி நேரம்.அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையில் உள்ளவர்களே வேலை இழப்பு,சம்பள பிரச்சினை என்று நிதி நெருக்கடியில் திண்டாடிய காலம் அது.மென்பொருள் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்த சோதனைக்குரிய காலம் அது.இங்கே எனக்கு தெரிந்த ஆன்ரி ஒருவரின் மகன் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.அந்த நேரத்தில் அவர்களுக்கும் அந்த தாக்கம் இருந்திருக்கும்போலும்.ஓரிரு மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லையாம்.அதை மிகுந்த மனவருத்தத்தோடு அந்த ஆன்ரி என்னிடம் தெரிவித்தார்.அவரின் நினைப்பு என்னவென்றால் மகன் ஊதாரித்தனமாக பணத்தை செலவுசெய்கிறாரோ என்று.இங்கே இருக்கின்ற பல தாய் தந்தையருக்கு இப்படியான நிலைமை சிலவேளைகளில் புரிவதில்லை.அவர்களுக்கு சொல்லிப்புரிய வைக்கவேண்டியது எம் கடமை இல்லையா?அதை விடுத்து அவர்களை நொந்துகொள்வதில் ஆகப்போவது எதுவுமில்லை.

என்னதான் பணம் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் அன்பு தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை..படிப்புக்காக ஊரைவிட்டு வந்து வாழ்ந்த நகர வாழ்க்கையில் தனிமையின் வலியை உணர்ந்த நாட்கள் எத்தனையோ.அவ்வாறு இருக்க நாடு விட்டு நாடு சென்று வசிக்கும் எம் உறவுகளின் மன நிலையை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.நண்பர்கள் சொந்தங்கள் என்று பல பேர் இருந்தாலும் எம்மில அக்கறைகொண்டு எம்மை கவனிக்க தங்களுக்கென்று ஒரு சொந்தத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு.அம்மா,அப்பா,சகோதரங்கள்,மனைவி,குழந்தைகள் என்று குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு இந்த மனத்தாக்கத்தின் அளவு குறைவாக தான் இருக்கும்.




ஆகவே வெளி நாட்டில் உள்ள எம் உறவுகளை பணம் காய்ச்சி மரங்களாக பார்க்காமல் உணர்வுகள் உள்ள மனிதர்களாக பார்ப்போம்.

Saturday, May 15, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

எனது முந்தைய பதிவு ஒன்றில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது பற்றி எழுதியிருந்தேன்.இந்தப்பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான
வழிமுறைகளை பற்றி குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.இந்த மன அழுத்தம் என்பது உறவுகளினால் வரலாம்..அலுவலகத்தில் கூட வேலை
செய்பவர்களால் ஏற்படலாம்..எதுவாயிருந்தாலும் மன அழுத்தம் குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போது அதுவே பல நோய்களுக்கு காரணமாவது மட்டுமல்ல மனிதனை மன நோயாளியாகவே மாற்றிவிடக்கூடும்.
ஒரு நாள் என் அலுவலக நண்பி ஒருத்தி சொன்னார் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தினமும் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போல் செய்வாராம்..ஏனென்று கேட்டால் மன அழுத்தத்தை குறைப்பதற்காக என்று...அதனை செய்து பார்த்ததில்லை என்றாலும் கூட அதன் பயனை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது...ஆண்களுக்கு இது மிகவும் பொருத்தமான வழி முறை என்பது எனது கருத்து..

அதனை விட மன அழுத்தத்தை குறைப்பதற்கு நான் எப்போதும் கடைப்பிடிக்கும் வழிகளில் ஒன்று வாய் விட்டு அழுவது தான்.அழுபவன் கோழை என்று நீங்கள் சொல்லக்கூடும்.மற்றவர்களுக்கு முன்னால் அழவேண்டும் என்ற அவசியம் இல்லை.மற்றவர்களுக்கு முன்னால் அதனை செய்யும்போது அவர்களுக்கு சங்கடமாக கஸ்டமாக இருக்கக்கூடும்.அதனால் தனிமையில் அதற்கேற்ற நேரம் காலம் பார்த்து நடைமுறைப்படுத்துவது நன்மைபயக்கும் என்று நினைக்கிறேன்....:).நான் இங்கே சொல்லும் கருத்தை மெய்ப்பிப்பது போல் ஒரு காட்சி "மொழி" படத்தில் இடம்பெற்றிருந்தது அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.
இறுதியாக நான் குறிப்பிடும் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.பொதுவாக குத்துப்பாடல்கள் கேட்கும்போது தான் ஆடத்தோன்றும் என்று எல்லோரும் சொல்வார்கள்.நான் அதில் விதிவிலக்கோ என்னவோ தெரியவில்லை..மனசுக்கு இதமான சில
மெல்லிசைப்பாடல்களைக்கேட்கும்போது கூட ஆடவேண்டும் போல் தோன்றும்.இயல்பாக எந்த நோக்கமும் இன்றி தான் அவ்வாறு ஆட ஆரம்பித்தேன்..ஆனால் உண்மையிலேயே கவலையை நீக்குவதில் மன அழுத்தத்தை குறைப்பதில் இசைக்கலையைப்போல் நடனக்கலைக்கும் கூட பெரிய பங்கு இருக்கிறது...மன அழுத்தம் குறைவது மட்டுமல்ல உடற்பயிற்சி நிலையம் செல்லாமலே உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் இது அமையும்..நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.அதை விட முக்கியமான அனுகூலம் பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா என்று கேட்டால் முழிக்க வேண்டிய அவசியமில்லை..;)(பெண்களுக்கு கூட பொருத்தமாக இருக்கும்:))

Saturday, April 17, 2010

இசைராணி

நாளுக்கு நாள் படத்துக்கு படம் என்று புது புது பின்னணி பாடகர்கள் முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை
இசையுலகையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த ஒரு இசைக்குயிலைப் பற்றியதே இந்தப்பதிவாகும்....

பாடகர்களுக்கு அடிப்படையாக தேவையானது இனிய குரல் வளமாகும்...அத்தோடு திரைப்பாடல்களுக்கு பின்னணி பாடும்போது பாடல் இடம்பெறும் சந்தர்ப்பம் சூழ்நிலை பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சி பாவங்களை குரலில் காட்டவேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.. அந்த ரீதியில் என்னுடைய இரசனையில் என்னுடைய கணிப்பில் பாடகர்களில் ஆண்களில் முதல் இடத்தில் இருப்பவர் எங்கள் எஸ்.பி.பி தான்...
ஆம்...பெண்களில் எனது பட்டியலில் முதலிடத்தில் யார்???அவரைப்பற்றி தான் இந்தப்பதிவு முழுக்க பேச இருக்கிறேன்....அவர் காலத்தில் வந்த
பின்னணி பாடகிகள் யாரும் அவருக்கு சளைத்தவர்கள் அல்ல...இருந்தாலும் விதம் விதமான பாடல்களை வித்தியாசமான குரல்களில் வரிக்கு வரி சொல்லுக்கு சொல் ஏன் எழுத்துக்கு எழுத்து என்று கூட சொல்லலாம் உணர்ச்சி கொடுத்துப்பாடுவதில் அவருக்கு நிகர் அவரே தான்...ஆம் அந்த குரலுக்கே உரிய மந்திரசக்தியால் எல்லோரையும் கட்டிப்போடும் தன்மை படைத்தவர்..அவர் வேறு யாருமல்ல..தமிழ் திரையிசையுலகின் பின்னணி பாடகி எங்கள் ஜானகி அம்மா தான்....பொதுவிலே அவரை பற்றி கதைப்பதைவிடுத்து அவர் பாடிய பாடல்களோடு அவரின் தனித்துவத்தை சாதனையைப்பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன்....

அந்த வகையில் "உயிரே உனக்காக"படத்தில் இடம்பெற்ற இப்பாடலை பார்ப்போம்..வானம்பாடியாக இயற்கையை இரசிக்கும் ஒரு வாலிப உள்ளத்தின் களிப்பை அப்படியே தன் குரலில் கொட்டிக்குவித்திருப்பார் ஜானகி அம்மா... லக்ஸ்மிகாந்த் பியரிலாலின் அற்புதமான இசையமைப்பை தன் இனிய குரலால் முழுமைப்படுத்தியிருப்பார் பாருங்கள்....


"அக்னி நட்சத்திரம்" படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இளமைத்துடிப்பு நிறைந்த ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை காட்டுவதாய் அமைந்திருக்கிறது...திரைப்படத்தை நான் இதுவரையில் பார்க்கவில்லை...இருந்தாலும் அருமையான இந்தப்பாடலுக்கு இந்தப்பாடல்காட்சி பொருத்தமாக அமையவில்லை என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்....


இயல்பாகவே ஜானகி அம்மாவின் குரலில் ஒரு மழலைத்தன்மை இருப்பதை நான் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்....இருந்தாலும் காதல் பாடல்கள் அதுவும் டூயட் பாடல் பாடும்போது குரலைக்குழைத்து கொஞ்சும் குரலில் அவர் பாடுவது பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துச்செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...இந்தப்பாடலைக்கேட்டுப்பாருங்கள்..."புதிய பூவிது பூத்தது"


அடுத்து ஒரு காதல் பெண்ணின் ஏக்கத்தை தவிப்பை காட்டும் இந்தப்பாடலை அவர் குரலில் கேட்கும்போது தெளிவாக இருக்கும் மனதில் கூட இல்லாத தவிப்பு சோகம் எல்லாம் வந்துவிட்டது போல் இருக்கும்....பாடல் தொடக்கத்தில் வரும் ஆலாவில அப்படியே உயிரை உருக்கிச்சென்றுவிடுவார் ஜானகி...


அடுத்ததாக தன் அன்புக்குரியவனை தேடித்தவிக்கும் ஒரு பெண்ணின் தவிப்பை வெளிப்படுத்தும் இப்பாடல் எத்தனை வருசம் கடந்தாலும் எல்லோர் மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.ஆம்..இந்தபாடலிலும் வரும் ஆலாவின் அழகை விபரிக்க வார்த்தைகளே இல்லை......இந்தப்பாடலை விரும்பாத பெண்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்பதே எனது கருத்து....அருமையான பாடல் வரிகள்..இசைஞானியின் அற்புதமான இசையமைப்பு...அதற்கும் மேலாக பாடலுக்கு உயிர் கொடுத்து பாடியிருப்பார் ஜானகி அம்மா...."காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.."


அடுத்தாக வரும் இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை நான் பார்க்கவில்லை..ஆனால் பாடல் வரிகளைப்பார்க்கும்போது காதலில் தோல்வியடைந்த ஒரு பெண்ணின் சோகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகவே எனக்கு தெரிகிறது......அழுவதாக இல்லாமல் தழுதழுத்த குரலில் சோகத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் பாருங்கள்...


இந்தப்பாடலில் சோகத்தை அழுகையாகவே வெளிப்படுத்தியிருப்பார்...பொதுவாக ஜானகி அம்மா பாடும்போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லையாம்..குரலில் மட்டும் அத்தனை நடிப்பும் இருக்குமாம்..ஆனால் இந்தப்பாடலை கேட்கும் எங்கள் கண்களில் கண்ணீரை வரவைத்து விடுகிறார்...


சோகம் சந்தோசம் தவிப்பு இவை மட்டுமல்ல வித்தியாசமான வில்லங்கமான பாடல்களைப்பாடுவதிலும் வல்லவர் அவர்...எஸ்.பி.பி உடன் இணைந்து பாடிய இந்தப்பாடலில் வித்தியாசமான உணர்வை நடிப்பை தன் குரலில் காட்டியிருக்கிறார் கேட்டுப்பாருங்கள்..."செங்குருவி செங்குருவி "


இவை மட்டுமல்ல மழலைக்குரலிலும் பாடுவதிலும் வல்லவர் அவர்...
டாடி டாடி ஒ...மை டாடி
பேபி பேபி...ஒ..மை பேபி
எனது கானம்...
இந்தப்பாடல்களில் அவரது மழலைக்குரல் அழகை நாங்கள் ரசிக்கலாம்...தற்போது இந்தப்பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்...

என்றும் வாழும் கானங்கள் தந்த எங்கள் இசைராணி பல்லாண்டு வாழவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திப்போம்...

Tuesday, March 16, 2010

சங்கீத கானங்கள்

நாம் வீதியால் செல்லும்வேளையில் சிலபேரைப்பார்க்கும்போது அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூட ஏற்கனவே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுவதுண்டு...பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள்.ஆண்கள் சிலர் பெண்களைக்கவிழ்ப்பதற்கு இதை உத்தியாக பாவிப்பதுமுண்டு...;).சரி இந்தக்கதை ஏன் இங்கே?....ஆம்..சில பாடல்களைக்கேட்கும்போது எனக்குள் அதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது...அது என்ன பூர்வஜென்ம பந்தமா???இல்லை..:)...இசைஞானியின் பாடல் ஒருவரி தன்னிலும் எங்கேயாவது கேட்டிருந்தாலும் அந்த இசை மனதில் ஆழமாகப்பதிந்திருக்கும்...திரும்ப ஒருமுறை கேட்கும்போது ஏற்கனவே கேட்ட உணர்வு ஏற்படும்....அது தான் உண்மை..என்னைப்பொறுத்தவரை...

பாடல்களை தத்துவப்பாடல்கள்,காதல் பாடல்கள்,இசைப்பாடல்கள்,சோகப்படல்கள் என்று பலவாறாக வகைப்படுத்தலாம்.....இந்தப்பதிவில் இசைப்பாடல்கள் சிலவற்றை தொகுத்து
தரலாம் என்று நினைக்கிறேன்....

இந்த பாடலைக்கேட்கும்போது "இன்னுமொரு பிறவி வேண்டும் இறைவா...அதிலாவது இசையோடு வாழ்கின்ற இசைக்காகவே வாழ்கின்ற பாக்கியம் வேண்டும்" என்று நினைத்துக்கொள்வேன்...இசைஞானம் என்பது நாம் கற்று தெரிந்துகொள்வது என்பதைவிட பிறப்பிலேயே கூட வருவது என்பது தான் எனது கருத்து.....கற்பதன் மூலம் அதை நாம் மேலும்  மெருகூட்டி கொள்ளலாம்...இந்த பாடலின் ஒவ்வொரு வரியுமே அர்த்தமுள்ள ஆழமான வரிகள்....

உயிர் பிறந்திடுமுன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்றபோதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசைதானே புரிந்துபாடு மனிதா...
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பதென்ன எளிதா....

பாடல் ஆரம்பத்தில் ஜேசுதாஸ் அவர்கள் ஆலாவை பாடிமுடித்து எஸ்.பி.பி "அருவி கூட.." என தொடங்க முதல் புல்லாங்குழல் இசையோடு நதியின் சலசலப்பையும் சேர்த்து என்று தொடக்க இசையையே இசையமைப்பாளர் இனியவன் பிரமாதமாக வழங்கியிருப்பார் பாருங்கள்..இந்த பதிவை வெளியிடும் இறுதி தருணம் வரைக்கும் இந்தப்பாடலின் இசை
இசைஞானியுடையது என்றே நம்பிக்கொண்டிருந்தேன்....கர்நாடக சங்கீதம் என்ற பலமான அடிப்படையோடு தமிழ் இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்...பொறியியலாளராக இருந்து அடிப்படை இசைஞானத்துடன் இசை உலகுக்கு வந்து இமயத்தைத்தொட்டவர் எஸ்.பி.பி அவர்கள்...ஆகவே தனிப்பட்ட ரீதியில் கூட அவர்கள் இருவருக்கும் மிகவும் பொருந்தக்கூடிய பாடலே.....பாடல் இடம்பெற்ற படம் கூட "கௌரிமனோகரி"என்ற அழகான இராகத்தின் பெயரிலேயே வருகிறது...(படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை..:))

இசையின் இரண்டு துருவங்கள் இணைந்து கலக்கிய இந்தப்பாடல் எம் உள்ளத்தை கவர்ந்து செல்வதில் அதிசயம் எதுவும் இல்லை தானே...


இசையின் பெருமையைக்கூறும் இன்னொரு பாடல் இது....இசைஞானியின் அற்புதமான இசையமைப்பில் வெளிவந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்......

நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்ற போதும்
அந்த தீயே வெந்து போகும்

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
வாழும் லோகம் ஏழும்
எந்தன் பாடல் சென்று ஆளும்

இசைஞானியின் பாடல்களில் பெரும்பாலானவற்றை எடுத்துக்கொண்டால் இசையில்
வீணைக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பார்.இந்தப்பாடலிலும் ஒலிக்கும் அந்த வீணை இசை பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துச்செல்கிறது....

அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பாடலையும் அதற்குரிய உணர்ச்சி பாவங்களைக்கொடுத்துப்பாடுவதில் என்னை பொறுத்தவரை எஸ்.பி.பி க்கு நிகர் அவரே தான்..இந்தபாடலிலும் அதை நாம் அனுபவித்து உணரலாம்.



இந்தப்பாடலும் இசைஞானியின் அற்புதமான இசையில் எஸ்.பி.பி அவர்களின் இனிய குரலில் அமைந்த ஓர் பாடல் தான்.

இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்

எந்தன் மூச்சும் இந்தப்பாட்டும்
அணையா விளக்கே...

என்றவாறான அற்புதமான வரிகளைக்கொண்ட பாடல் இது....

Sunday, March 7, 2010

போற்றுதற்குரிய பெண்

உலக மகளிர் தினமான இன்று உலகமே வியந்து பார்க்கும்படியாக சாதனை படைத்த பெருமைக்குரிய  பெண்கள் பற்றிய தொகுப்பு ஒன்றை தரலாம் என்று நினைத்து பல்வேறு துறைகளிலிருந்தும் சாதனை படைத்த பெண்களில் முக்கியமான ஒரு சிலரின் தகவல்களையும் திரட்டி வைத்திருந்தேன்....ஆனால் கடந்த பதிவில் பெரும்பாலான நண்பர்களால் முன்வைக்கப்பட்ட நீளப்பிரச்சினையை கருத்தில்கொண்டு முக்கியமான ஒருவரை மட்டும் இந்தப்பதிவில் உள்ளடக்கலாம் என்று நினைக்கிறேன்.விண்வெளி வீராங்கனையாக விமானியாக விஞ்ஞானியாக புகழ் பெற்ற அரசியல் தலைவராக என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இருந்தாலும் மனிதருக்காக மனித குலத்துக்காக மகத்தான சேவை புரிந்த இந்தப்பெண் தான் என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப்பெண்ணின் பெருமைகளை சாதனை என்ற தலைப்பில் குறிப்பிடுவதை விட போற்றுதற்குரியதாக குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என்று நான் கருதுகிறேன்..


யாருமே அருகில் நெருங்கக்கூட விரும்பாத தொழுநோயாளிகளை கூடவே இருந்து அன்பு செலுத்தி அரவணைத்த கருணை உள்ளம் அவர்.ஒருமுறை விருந்து ஒன்றுக்கு சென்ற அன்னை திரும்பும் நேரத்தில் அங்கே உண்டவர்கள் மிச்சம் மீதியாக விட்டிருந்த உணவுப்பண்டங்களை ஒரு பொதிக்குள் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டிருந்தாராம். "ஏன் அவ்வாறு எச்சில் பண்டங்களை நீங்கள் எடுக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு  அவரின் பதில் "இந்த உணவுப்பண்டங்களையெல்லாம் கண்ணால் கூட பார்த்திராத எத்தனையோ ஏழைக்குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக தான் "என்றவாறு இருந்தது.ஆம்..அவரின் கருணையை அன்பை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

அவரின் பொன்மொழிகள் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...
  • உண்ண உணவில்லாமல் இருப்பதை விட யாராலும் தேடப்படாத விரும்பப்படாத கவனிக்கப்படாத மறக்கப்பட்ட ஒருவராக இருப்பதே மிகப்பெரிய வறுமையாகும்.
  • தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
  • ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்கள் கூட அன்புக்காக கவனிப்புக்காக தங்களுக்கென்று ஒரு சொந்தத்துக்காக  ஏங்கும் தாகம் பசி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
  • நீங்கள் மனிதர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களில் அன்பு செலுத்துவதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது போய்விடும்.
இதுவரை நான் குறிப்பிட்டுக்கூறிய இந்தப்பெண் யார்.....?

இன நிற மத சாதி பேதங்களை கடந்து எல்லா மனிதருக்குமே பொதுவாக பிடித்தமான ஒருவர் ஈன்ற தாய் தான்.ஆனால் எந்த அன்னையும் பொதுவாக மற்றவர்களை விட தன் பிள்ளையில் தான் கூட பிரியமாக இருப்பாள்.ஆனால் நோயுற்ற வறிய கைவிடப்பட்ட மக்கள் அனைவருக்குமே அன்னையாக இருந்தவர் இந்தப்பெண்..அவர் தான் என்றும் எங்கள் போற்றுதலுக்குரிய அன்னை தெரேசா அவர்கள்....

 1910 ம் ஆண்டு ஆவணி மாதம் 26ம் திகதி அல்பேனிய நாட்டில் பிறந்த அன்னை தெரசா தனது 18 ஆவது வயதில் திருத்துவ சகோதரிகள் குடும்பத்தில் இணைந்துகொண்டு 1931 ம் ஆண்டு இந்தியாவில் தனது பணியைத்தொடங்கினார்.1931 தொடக்கம் 1948 வரையான காலப்பகுதியில் கல்கத்தா புனித மரியாள் கல்லூரியில் கற்பித்த அன்னை தெரசா அக்காலப்பகுதியில் கல்கத்தாவின் சேரிப்புறத்தில் வறுமையாலும் நோயினாலும் அவதிப்படும்  மக்களின் துன்பங்களைப்பார்த்து பார்த்து தனது  வாழ்க்கைப்பாதையையே மாற்றிக்கொள்ள தீர்மானித்தார்.மேலிடத்தின் அனுமதியுடன் தனது கற்பித்தல் தொழிலை விடுத்து வறுமையின் பிடியில் சிக்கிய மக்களுக்காக தனது சேவையினை தொடங்கினார்.அவர் தனது சேவையினை தொடர்ந்து ஆற்றுவற்குரிய நிதிவளம் அவரிடம் இல்லாதிருந்தபோதும் கடவுள் மேல் பாரத்தைப்போட்டு சேரிப்புறப்பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை ஆரம்பித்து  தனது பணியைத் தொடங்கினார்.காலப்போக்கில் தொண்டர்கள் நிதிவளம் படைத்தவர்கள் அவரோடு இணைந்துகொண்டு பேருதவிபுரிந்ததால் அவர் தனது சேவையினை விரிவுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.இவ்வாறாக தனது பணியைத்தொடர்ந்த அன்னை அவர்கள் 1950 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7 ஆம் திகதி  அநாதரவான மக்களுக்கான தர்மஸ்தாபனமொன்றை ஆரம்பித்தார்.ஆதரவற்ற கைவிடப்பட்ட மக்களுக்கு அன்பு காட்டி அரவணைக்கும் இல்லமாக இந்த அமைப்பு திகழ்ந்தது.இன்று ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என எல்லாக்கண்டங்களிலும் உள்ள நாடுகளிலும் கிளைகளைக்கொண்டு பரந்துவிரிந்த அமைப்பாக இது திகழ்கிறது.இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்கள், அகதிகள், எயிட்ஸ் நோயாளிகள், வதிவிடமற்றவர்கள், போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள் என பலவேறு தரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

அன்னையின் புனிதப்பணிகளுக்காக பல்வேறுபட்ட விருதுகளை அவர் வென்றிருக்கிறார்.உலக சமாதானம் புரிந்துணர்வுக்கான நேரு விருது(1972) உலகின் மிகப்பெரிய கௌரவ விருதான நோபல் பரிசு(1979) என்பவை இங்கே குறிப்பிடத்தக்கவையாகும்.நோபல் பரிசை அவர் ஏற்றுக்கொண்டபோது அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இதோ இங்கே தந்திருக்கிறேன்...

"I choose the poverty of our poor people. But I am grateful to receive (the Nobel) in the name of the hungry, the naked, the homeless, of the crippled, of the blind, of the lepers, of all those people who feel unwanted, unloved, uncared-for throughout society, people that have become a burden to the society and are shunned by everyone."

மனிதகுலம் கண்ட அந்த மகத்தான பெண்ணைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் நான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.அக்கிரமங்கள் மலிந்துவிட்ட இன்றைய உலகில் மீண்டும் ஒரு அன்னைதெரேசா உதிக்க வேண்டும்  மனித நேயத்தை  வளர்க்கவேண்டும்  என்பதே இன்றைய நாளில் எங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும்...

தகவல்கள்-இணையம்

(எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தாலும் கூட இந்த தினத்தில் அவரைப்பற்றி அவர் காட்டிய வழிகளை நினைவுகூர்வது  பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.........:))

Wednesday, February 24, 2010

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

இயந்திரத்தனமான இன்றைய உலகில் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கும் அவதியில் எங்கள் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை பெரும்பாலும் இழந்து தவிக்கிறோம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டனின் மனைவி மார்த்தா வோசிங்டன், எங்கள் மகிழ்ச்சி நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதாவது எங்கள் பார்வையில் தான் பெருமளவில் தங்கியிருப்பதாகவும் கூறிய பொன்மொழியொன்றை இணையத்தளத்தில் வாசித்த ஞாபகம்.என் அனுபவத்தில் கூட அவர் கூறியது மிகவும் உண்மை என்று அறிந்திருக்கிறேன்.அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எங்களை வெற்றியாளர் என்று நினைத்தால் உண்மையிலேயே வெற்றியாளர் ஆகின்றோம் என்று.அதற்காக நினைத்தால் மட்டும் அப்படி ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்கக்கூடும்.யார் அவ்வாறு திடமாக நம்புகிறார்கள்.உண்மையான ஊக்கம்,அர்ப்பணிப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை உள்ள ஒருவனே அவ்வாறான ஒரு திட நம்பிக்கையைக்கொண்டிருப்பான். மற்றவர்கள் நான் இதில் வெற்றி பெறுவேனோ இல்லை தோற்றுவிடுவேனோ என்று சந்தேகத்துடனயே இருப்பார்கள்.வெற்றி மட்டுமல்ல எங்கள் மகிழ்ச்சியும் கூட எங்கள் எண்ணங்களில் தான் தங்கியிருக்கிறது.பிரச்சினையில் இருக்கும்போது கூட நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எங்கள் மனது நம்பினால் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறுவோம்.பிரச்சினைகளை யோசித்து எதுவும் நடக்கப்போவதில்லை என்ற சந்தர்ப்பத்தில் எதற்காக சோகத்தை வரவழைத்து சுயபச்சாதாபத்தையோ இல்லை மற்றையவர்களின் கழிவிரக்கத்தையோ தேடவேண்டும்.நண்பர் புல்லட்டின் பதிவு ஒன்றில் கூட இது சம்பந்தமாக ஒரு சம்பவத்திற்கான எங்கள் மனதின் மறுதாக்கம் பற்றி ஆராய்ந்திருந்தார்.


 "யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்........"என்ற பாடல் வரி தான் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.எம்மில் பெரும்பாலோனோர் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணம் என்னவென்றால் கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்.தெருவில் படுத்துறங்கும் பிச்சைக்காரன் தொடக்கம் பங்களாவில் பஞ்சணையில் படுத்துறங்கும் கோடீசுவரன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும்.இதை நாம் முதலில் புரிந்துகொண்டாலே எமக்குள்ள கவலையில் பாதி குறைந்து விடும்.

எங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது "இவ்வாறு நடந்துவிட்டதே " என்று ஏங்கித்தவித்தே எங்கள் ஆயுளில் பாதியைக்கழித்துவிடுகிறோம்.நடந்ததை நினைத்து ஏங்குவதால் இனி நடக்கப்போகும் எதையும் எம்மால் மாற்றிவிடமுடியாது.எனவே எதற்காக இந்த ஏக்கம் தவிப்பு என்று நம்மை நாமே வருத்திக்கொள்ளவேண்டும்(இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் எழுத்துக்களில் கதைகளில் எனக்கு பிடித்த முக்கியமான விடயமே அவர் கதைகளில் வரும் எந்த கஸ்டம் வரும்போதும் சலித்துவிடாமல் வாழ்க்கையோடு போராடிவெற்றிபெறும் அவரின் நாயகிகள் தான்.முன்பெல்லாம் நான் கூட இதே தவறைத்தான் செய்துவந்திருக்கிறேன்.சிறிய கஸ்டம் வரும்போதும் மனமொடிந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடுவேன்.ஆனால் அனுபவப்பாடங்கள் மூலமாக என்னை நானே வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு பலவாறு சொன்னாலும் நடைமுறைப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதன்று.கஸ்டங்கள் கவலைகள் வரும்போது மனம் சோர்ந்துபோய்விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றே.எனவே முழுக்க முழுக்க அவற்றை மறந்துவிடமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கவலை என்னும் கறையான் எங்கள் மனப்புத்தகத்தை அரித்துவிடாமல் பார்க்கவேண்டியது எங்கள் பொறுப்பாகும்.அதற்காக பிரச்சினைகள் வரும்போது யாரையும் ஓடியொளியும்படி நான் சொல்லவில்லை.தைரியமாக எந்த சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.தீர்க்கக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதற்கு அப்பால் அவற்றையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். 




இவ்வளவு நேரமும் பிரச்சினைகளில் இருந்து அவற்றின் தாக்கங்களிலிருந்து எவ்வாறு விலகி இருக்கலாம் என்று பார்த்தோம்.இத்தனையையும் தாண்டி எங்கள் மனதைக்காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.

ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்.எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய வாசிக்கலாம்.அது மட்டுமல்ல குடில்(blog)போன்றவற்றை அமைத்து உங்கள் உணர்வுகளை படைப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும்.நானென்றால் மனதுக்குப்பிடித்த பாடல்களைக்கேட்பேன்.சில நேரங்களில் வாய்விட்டு பாடுவதும் உண்டு.(இந்த விசப்பரீட்சையை உங்கள் வீட்டில் செய்யமுன் அதற்குரிய சூழல் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு கிலோ பஞ்சு வாங்கி வீட்டுக்காரருக்கு கொடுத்து கழுதைகள் உள்ளே புகாத வண்ணம் குளியலறைக்கதவு,யன்னல்கள் பலமாக இருக்கின்றன என்பவற்றையெல்லாம் பரிசோதித்துவிட்டே நான் அதை செய்வேன்...ஹி..ஹி..ஹி... ).சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....இப்போதெல்லாம் ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடைய நினைப்பு முழுவதும் என்னுடைய குடிலில் அடுத்து என்ன எழுதலாம் என்பது பற்றி தான்..:) சிலருக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் இருக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கும்.எதுவாயிருந்தாலும் உங்கள் மனதுக்கு திருப்தி சந்தோசம் அளிக்கக்கூடிய விடயங்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.




அடுத்ததாக உங்கள் பிரச்சினைகளை மனம்விட்டு யாரிடமாவது சொல்லுங்கள்.ஆனால் கேட்பவர் உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ளவில்லை என்றால் அதனால் வரும் காயத்தை ஆற்றுவதற்கு எந்த மருந்தும் இல்லை.எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களை உறவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.இன்று உலகில் தற்கொலைசெய்யும் பலரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தீவிரமான பிரச்சினையைக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதைவிட தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு பேசமுடியாதவர்களாகவே பெரும்பாலும் இருந்திருப்பார்கள்.எனவே இந்தச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறேன்.உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் ஏன் தெரியாதவர்களாக இருந்தால் கூட தங்கள் பிரச்சினைகளை மனம்திறந்து உங்களிடம் பேசவரும்போது அவர்களுடைய பிரச்சினைகள் தவிப்புக்களை காதுகொடுத்து கேளுங்கள்.குறைந்தபட்சம் கேட்கிறமாதிரி நடிக்கவாவது செய்யுங்கள்.(அவர்கள் அறியாவண்ணம்).நீங்கள் அவ்வாறு செவிமடுப்பதாக அவர்கள் நம்பும்போது அவர்களின் மனதில் உள்ள பாரம் பாதியாகக்குறைந்துவிடும்.

எங்கள் சந்தோசத்தை கெடுக்கும் இன்னொரு முக்கியமான எதிரி ஒப்பீடு.நண்பர்களோடு ,கூட வேலைபார்க்கின்றவர்களோடு எங்களை ஒப்பீடு செய்வது.இறைவனின் படைப்பில் நாங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்குரிய கடமையை சரிவரச்செய்யுங்கள்.எங்களோடு நாங்களே போட்டிபோட்டு ஒவ்வொரு நாளும் எங்களை நாங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.ஆரோக்கியமான வளர்ச்சிக்காக மற்றவர்களோடு போட்டிபோடலாம்.அதில் பிழையில்லை.ஆனால் மற்றவர்களின் வளர்ச்சியைபார்த்து மனம் வெந்துபோவதற்காக அல்ல.பெரியவர்கள் சொல்வார்கள் "உனக்கு கீழ் இருக்கும் கோடி நினைத்து நிம்மதி தேடு "என்று.எங்களை விட உயரத்தில் இருப்பவர்களை பார்த்து மனம் நோவதை விட்டு எங்களை விடவும் குறைந்த மட்டத்தில் இருப்பவர்களை நினைத்துப்பார்த்து நிம்மதி அடையவேண்டும் என்று.என்னதான் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இதை கடைப்பிடிப்பது என்பது கொஞ்சம் கடினமான விடயம் தான்.அதற்குரிய மனப்பக்குவம் இலகுவில் வந்துவிடாது.

இறைவனின் படைப்புக்களிலேயே உன்னதமானது மனிதப்பிறவி.எம்மில் பலர் அந்த மகத்துவத்தை புரியாமலே இருக்கிறோம்.பிரச்சினைகள் சோதனைகள் வரும்போது தைரியமாக அவற்றை எதிர்கொள்ளுங்கள்.அந்த சவாலை நீங்கள் சமாளித்து வெற்றிகொள்ளும்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மகிழ்ச்சி திருப்தி உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர்கள்.என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.ஆம்......

"பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை".......இந்தப்பாடல் வரிகளை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இத்தனை விளக்கங்களுடன் கூறிய எல்லா கருத்துக்களையும் கவிஞர் இந்தப்பாடலில் அழகாக அடக்கித்தந்திருக்கிறார்.

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே அங்குமிங்கும் கொட்டிக்கிடக்கு
கண்ணிரண்டு செவியும் திறந்து வைத்தால் சுத்தி சுத்தி இன்பமிருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும் பூவின் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது..........

இருட்டைக்கண்டு மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை
அகலும் செய்துவிடும்

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
மனித ஜாதி ஒன்று தான் சிரிக்கத்தெரிந்தது.....

இவ்வாறாகத்தொடர்ந்து செல்கிறது பாடல்.இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று நினைக்கிறீர்கள்...அவர் வேறு யாருமல்ல.....
எங்கள் வைரவரிக்கவிஞர் கவிப்பேரரசுவே தான்......

Thursday, February 18, 2010

எனது கானங்கள்

சில பாடல்கள் கேட்கும்போது காதில் தேன்பாயும்...அத்தோடு சரி...சில பாடல்கள் கேட்கும்போது மனதை வருடிச்செல்லும்...ஒன்று இரண்டு பாடல்கள் தான் உயிரை தொட்டு செல்லும் தன்மையுடையன...அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களைத்தருவதில் என் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் இசைஞானிதான்.இந்தப்பாடலும் அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களில் ஒன்று...

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை நான் பார்த்ததில்லை.பாடல் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது என்பதும் எனக்கு தெரியவில்லை...ஆனாலும் அது என்னவோ தெரியவில்லை..."ஓ..ஜனனி....என் ஸ்வரம் நீ "என்ற அந்த ஒற்றை வரியைக்கேட்டதுமே என் உயிர் உருகிக்கரைந்துவிடும்.... பாடல் இசைக்கத்தொடங்கும்போது கூட்டை விட்டு வெளியேறும் உயிர் பாடல் ஒலித்து ஓயும் வரை திரும்பிவர மறுத்துவிடும்.காரணம் இசைஞானியின் உயிரை உருக்கும் மெட்டு என்றே நான் கருதுகிறேன்......வாலிபக்கவிஞர் வாலியின் அர்த்தம் பொதிந்த ஆழமான வரிகள் இசைஞானிக்கு அடியெடுத்துக்கொடுக்கிறது.

"மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி.....பாதை இல்லாத யாத்திரை மேகம் இல்லாத வான்மழை ஏதடி..."என்று நாயகன் கேள்வியோடு முடிக்கும்போது இல்லை என்று பதில் சொல்வது போல் இசைஞானி ஒரு புல்லாங்குழல் இசை(எனக்கு தெரிந்தவரை அது புல்லாங்குழல் தான்..:)) கொடுத்திருப்பார் பாருங்கள்....அற்புதமாக இருக்கும்...
எஸ்.பி.பி.இன் குரலை ஒத்த குரலுக்குரியவர் பாடகர் மனோ.எஸ்.பி.பி பாடிய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலான பாடல்களைப்பாடியிருந்தாலும் அத்தனையும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் என்பதற்கு இந்தப்பாடலே பெரிய சான்று...
சோகமான பாடல்களில் ஒரு சுகம் இருக்கும் என்று சொல்வார்கள்.இந்தப்பாடலும் அப்படித்தான்.....



இசைஞானிக்கு அடுத்ததாக நான் வெகுவாக இரசிப்பது தேனிசைத்தென்றல் மற்றும் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களின் இசையை தான்..."உன்னைக்கொடு என்னைத்தருவேன்"படத்துக்காக இடம்பெற்ற இப்பாடலையும் அதன் அருமையான இசைக்காகவும் மனதைக்கவரும் எளிமையான பாடல் வரிகளுக்காகவும் நான் வெகுவாக இரசித்திருக்கிறேன்.....

பொதுவாக எந்த ஆணுமே தனக்கு வரப்போகின்றவள் தனக்கு இரண்டாவது அன்னையாக இருக்கவேண்டுமென்றே எதிர்பார்ப்பான்.பெண்களும் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.தனக்கு கணவனாக வரப்போகின்றவனை தனது பிள்ளையாக தனது தாயாக என்று ஒவ்வொரு அவதாரத்தில் பார்க்கவே விரும்புவாள்.அந்த உணர்வு வெளிப்பாடு இந்தப்பாடலிலும் இருக்கிறது...

"காற்றில் தூசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்....
வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் இரண்டை உனக்காக குடையாக மாற்றுவேன்..."

இந்த வரிகளில் கவிஞரின் கற்பனைக்குதிரை எங்கள் உள்ளத்தையும் சேர்த்து இழுத்துச்சென்றுவிடுகிறது...

பாடலின் ஒவ்வொரு வரிகளும் எனக்கு பிடித்தமானவையே..அதிலும் "என்னைக்கிள்ள எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்" என்ற வரியை சிறு சிணுங்கலுடன்(சின்ன சிரிப்புடன்) சின்னக்குயில் பாடி முடிப்பது மிகவும் இரசிக்கும்படியாக இருக்கிறது...

பாடலுக்கு மகுடம் வைப்பதுபோல உன்னிகிருஷ்ணன்,சித்ராவின் ஜோடிக்குரல்கள்.....கேட்பவர்களைக்கவர்ந்திழுப்பதில்
எந்த அதிசயமும் இல்லை.




இசைஞானியின் அருமையான வார்ப்புக்களில் இந்தப்பாடலும் ஒன்று....காதல்,வெறுப்பு,தவிப்பு,சோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் கடந்து என்னை மறந்து எப்போதுமே நான் இரசிக்கும் பாடல் இது..இயற்கையைப்பற்றி நிறையப்பாடல்கள் வந்திருந்தாலும் இந்தபாடலில் எனக்கு எப்போதுமே ஒரு தனிப்பிரியம் உண்டு.கவிஞரின் கற்பனை வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது...இருந்தாலும் என்னை கொள்ளை கொண்ட வரிகள் இவையே....

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்..."

பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை,கேட்கும்போது காதில் பாலும் தேனும் கலந்து பாய்கிறது.பாடலைப்பற்றி நான் குறிப்பிடாத குறிப்பிட அவசியமில்லாத விடயம் ஒன்று இங்கே இருக்கிறது..ஆம்..மணி மகுடம் வைத்தது போல வரும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் தான் அது..

TamilWire.com - Vanna Vanna Pookal - Ila Nenje Vaa .mp3
Found at bee mp3 search engine
Tamilish

தமிழும் நானும்

சிறு வயதிலிருந்தே வாசிப்பு எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவே இருந்துவருகிறது.அதே போல் நிறைய எழுதவேண்டும் எனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை......பாடசாலையில் படிக்கும் காலத்தில் போட்டிகளில் பங்குபற்றி அந்த தாகத்தை ஓரளவு தீர்த்திருக்கிறேன்.பல்கலைக்கு வந்தபின்னர் அவ்வாறான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.வாய்ப்பு கிட்டவில்லை என்பதை விட கிடைத்த வாய்ப்புக்களை நான் சரிவரப்பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

எமது ஊரில் இருக்கும்போது எங்கள் மொழியின் அருமையை அதன் மேல் எங்களுக்கு உள்ள பற்றை நாங்கள் புரிந்துகொள்வதில்லை.(எனது அனுபவத்தை சொல்கிறேன்.உங்களுக்கு எப்படியோ தெரியாது).மாறாக பிற மொழி ஆதிக்கம் உள்ள இடத்துக்கு செல்லும்போது தான் அந்த அருமை எங்களுக்கு புரியும்.எமது மொழியில் யாராவது கதைக்கும்போது காதில் தேன் பாய்வது போல் இருக்கும்...இதை இலங்கையில் இருக்கும் நான் சொல்வதை விட வெளிநாடுகளில் குறிப்பாக எம்மவர் அரிதாக வாழும் இடங்களில் வசிப்பவர்கள் அதிகமாகவே உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்."சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா...எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?இந்த தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...".என்று சும்மாவா சொன்னார்கள்.

நேரம் கிடைக்கும்பொழுதில் எல்லாம் கூகிள் தேடலில் சென்று தமிழ் இணையத்தளங்களுக்கு சென்று பார்ப்பேன்....ஆயுள் முழுவதும் .வாசித்தாலும் இணையத்தில் உள்ள அத்தனை தமிழ் ஆக்கங்களையும் வாசித்து முடித்து விட முடியுமா என்று யோசித்து சலித்தே விட்டேன்.இணையம்,நாகரீகம் என்று உலகத்தின் அசுர வளர்ச்சியைக்கண்டு எங்கே எங்கள் தமிழ் அழிந்து விடுமோ என்று கலங்கியவர்களும் உண்டு தான்."தமிழ் இனி மெல்லச்சாகும்" என்ற கூற்று இரு பொருள்படும்.ஒன்று தமிழ் மெல்ல சாகும் மற்றையது தமிழ் மெல்ல அச்சாகும்....ஆம்..இன்றைய இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எடுத்து நோக்கும்போது எங்கள் தமிழ் அச்சாகிவிட்டது வெளிப்படை உண்மை.

இந்தப்பெரிய உலகத்தில் தமிழ் பேசும் அத்தனை நெஞ்சங்களுடனும் எனது உணர்வுகளைப்பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் எமக்கென்று ஒரு சின்னக்கூட்டில் என் நண்பர்களோடு என் படைப்புக்களை பகிர்ந்துகொள்வதில் அளவில்லா ஆனந்தம் அடைகிறேன்.......

எனது டயரி (diary) குறிப்புக்கள் -எவன் மனிதன்????

 எமது அன்றாட வாழ்வில் எத்தனையோ விதமான மனிதர்களை நாம் சந்திக்கின்றோம்.என் வாழ்விலும் அவ்வாறு நான் சந்தித்த என்னைப்பாதித்த
மனிதர்கள்,சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.தினமும் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் டயரியில் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் சில சம்பவங்கள் மனதின் பக்கங்களில் ஆழமாகப்பதிந்துவிடுவதால் அவற்றை என் ஞாபகத்திலிருந்து சுலபமாக அழிக்க முடிவதில்லை.இவற்றை வாசிக்கும்போது உலகம் போகின்ற போக்கில் இதெல்லாம் ஒரு விடயமா என்று நீங்கள் எண்ணக்கூடும்.என்னைப்பொறுத்
தவரையில் ஒருவன் எவ்வளவு தான் பணம் புகழ் பதவி அந்தஸ்து பெற்றிருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட
சமூகத்துக்கு மற்றைய மனிதர்களுக்கு ஒரு நல்ல மனிதனாக இருப்பதையே மிகப்பெரிய கௌரவமாகக்கருதுகிறேன்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன் 155 பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு நாள்.நான் பஸ்ஸில் ஏறி மூன்றோ நான்கோ தரிப்பிடங்கள் கழிந்த நிலையில் ஒரு தரிப்பிடத்தில் இளம்பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். சாதாரணமாக எனக்கென்றால் கையில் கொஞ்சம் பாரம் கூடிய பை இருந்தாலே ஏறுவதும் ஏறியபின் இருக்கை கிடைக்கவில்லை என்றால் அதை வைத்துக்கொண்டு அல்லாடுவதுமாக என் பாடு பெரும்திண்டாட்டம் தான்.அப்படியிருக்கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று என்னால் உணரக்கூடியதாக இருந்தது.நான் சொல்ல வந்த விடயம் என்னவென்றால் யாரும் எழுந்து அந்த பெண்ணுக்கு இடம்கொடுக்க முன்வரவில்லை என்பதுதான்.பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் நடத்துனர் வந்து சத்தம் போட்டு முன்னுக்கு இருப்பவரை காலி செய்யவைத்து அந்த இடத்தைகொடுப்பதுண்டு.அன்றைக்கென்று
அவரையும் காணவில்லை.இத்தனைக்கும் நாம் வருத்தப்பட வேண்டிய வெட்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் 155 பஸ்சில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எம்மவர்கள்.”யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன” என்ற எண்ணமா அல்லது “யாராவது எழுந்து இடம்கொடுக்கட்டுமே” என்ற தாராள மனப்பான்மையா என்று எனக்கு விளங்கவேயில்லை.இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்..இதே சம்பவம் 100 பஸ்சிலோ அல்லது 101 இலோ நடந்திருந்தால் குறைந்தது ஒருத்தராவது எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. 6 வருட கொழும்பு வாழ்க்கையில் எமது சகோதர இனத்தவரிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல இயல்புகளில் இதுவும் ஒன்று.எம்மவர்களை குறைத்துச்சொல்லவேண்டும் என்று எனக்கொன்றும் ஆசையில்லை மாறாக வருத்தம் தான். ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதே. அவர்களில் அவ்வாறான நல்ல பண்பு கொண்டவர்கள் 100 இற்கு 60 என்றால் எம்மில் 100 இற்கு 20 மட்டுமே என்பது எனது அனுபவக்கணிப்பு.

இவ்வளவும் சொல்கிறாயே நீ எழுந்து இடம் கொடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது.அன்று நான் அதைச்செய்யாவிட்டால் இன்று உங்கள் முன் இதை சொல்வதற்கேஅருகதையில்லாதவளா
இருந்திருப்பேன்.அன்றைக்கு நான் அமர்ந்திருந்த இருக்கை பஸ்சின் வாசல் பக்கத்துக்கு எதிர்ப்பக்கமுள்ள வரிசையில் இரண்டாவது நிரையில் யன்னல் கரை இருக்கை.அன்றைக்கென்று பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கைகளையும் சுற்றி நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.அந்த மூலையில் இருந்து பெரும் சிரமப்பட்டு வெளியேறி அந்த இடத்தை கொடுக்கவேண்டியிருந்தது.இவ்வளவும் நடக்கும் வரை அந்த பெண் குழந்தையுடன் நிச்சயமாக அல்லாடி இருப்பார். இதை பார்க்கும்போது ஏன் ஒருத்தருக்கு கூட அந்த இரக்கம் ஏற்படவில்லை என்று என்னால் விளங்கமுடியவில்லை.

மற்றவர்களுக்கு பணம் பொருள் கொடுத்துதான் உதவிசெய்யவேண்டும் என்று இல்லை.எம்மால் முடிந்தவரை இவ்வாறான சிறிய உதவி தன்னிலும் செய்யமுடியுமாயின் அது கூட பெரிய விடயம்தான்.அதில் கிடைக்கின்ற சந்தோசமே தனி. பெரும்பாலான பஸ்களில் பார்த்தால் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கும்.
"Please do give the seat to some one who needs more than you do."
எம்மில் எத்தனை பேர் அதை வாசித்திருக்கிறோம்......எத்தனை பேர் அதை பின்பற்றுகிறோம்......

இது போன்ற வேறு சில சம்பவங்களையும் இந்த குறிப்பில் உள்ளடக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.எழுதத்தொடங்கியபின் அது தொடர்கதையாகவே நீண்டு செல்வதால் மிகுதியுடன் அடுத்தகுறிப்பில் உங்களைச்சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.:)

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தப்பாடல் தான் என் ஞாபகத்துக்கு வருகிறது...."மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்..................."


கூப்பிடும் தூரத்தில் வாழ்க்கை - வைரமுத்து கவிதை

சின்ன வயதில் வானொலியில் இந்த கவிதையை கேட்ட ஞாபகம்....நீண்ட காலத்தின் பின்னர் இணையத்தில் இதனைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.....வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்று அதிலும் தோற்றிருக்கும் ஒரு இளைஞனுக்கு கூறும் அறிவுரையாக அமைந்த கவிதை இது..வைரமுத்துவின் வைரவரிகளில்...........


தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே

சொல்

பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?

மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது

கைந்நிறையப் பூக்கள்

இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?


வாழ்க்கையோடு
உடன்பாடு

மனிதரோடுதான்
முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி

படித்ததில் பிடித்தது- வைரமுத்துவின் வைரவரிகள்

பூக்களும் காயம் செய்யும்

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி ந

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகித

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.