Tuesday, March 16, 2010

சங்கீத கானங்கள்

நாம் வீதியால் செல்லும்வேளையில் சிலபேரைப்பார்க்கும்போது அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூட ஏற்கனவே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுவதுண்டு...பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள்.ஆண்கள் சிலர் பெண்களைக்கவிழ்ப்பதற்கு இதை உத்தியாக பாவிப்பதுமுண்டு...;).சரி இந்தக்கதை ஏன் இங்கே?....ஆம்..சில பாடல்களைக்கேட்கும்போது எனக்குள் அதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது...அது என்ன பூர்வஜென்ம பந்தமா???இல்லை..:)...இசைஞானியின் பாடல் ஒருவரி தன்னிலும் எங்கேயாவது கேட்டிருந்தாலும் அந்த இசை மனதில் ஆழமாகப்பதிந்திருக்கும்...திரும்ப ஒருமுறை கேட்கும்போது ஏற்கனவே கேட்ட உணர்வு ஏற்படும்....அது தான் உண்மை..என்னைப்பொறுத்தவரை...

பாடல்களை தத்துவப்பாடல்கள்,காதல் பாடல்கள்,இசைப்பாடல்கள்,சோகப்படல்கள் என்று பலவாறாக வகைப்படுத்தலாம்.....இந்தப்பதிவில் இசைப்பாடல்கள் சிலவற்றை தொகுத்து
தரலாம் என்று நினைக்கிறேன்....

இந்த பாடலைக்கேட்கும்போது "இன்னுமொரு பிறவி வேண்டும் இறைவா...அதிலாவது இசையோடு வாழ்கின்ற இசைக்காகவே வாழ்கின்ற பாக்கியம் வேண்டும்" என்று நினைத்துக்கொள்வேன்...இசைஞானம் என்பது நாம் கற்று தெரிந்துகொள்வது என்பதைவிட பிறப்பிலேயே கூட வருவது என்பது தான் எனது கருத்து.....கற்பதன் மூலம் அதை நாம் மேலும்  மெருகூட்டி கொள்ளலாம்...இந்த பாடலின் ஒவ்வொரு வரியுமே அர்த்தமுள்ள ஆழமான வரிகள்....

உயிர் பிறந்திடுமுன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்றபோதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசைதானே புரிந்துபாடு மனிதா...
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பதென்ன எளிதா....

பாடல் ஆரம்பத்தில் ஜேசுதாஸ் அவர்கள் ஆலாவை பாடிமுடித்து எஸ்.பி.பி "அருவி கூட.." என தொடங்க முதல் புல்லாங்குழல் இசையோடு நதியின் சலசலப்பையும் சேர்த்து என்று தொடக்க இசையையே இசையமைப்பாளர் இனியவன் பிரமாதமாக வழங்கியிருப்பார் பாருங்கள்..இந்த பதிவை வெளியிடும் இறுதி தருணம் வரைக்கும் இந்தப்பாடலின் இசை
இசைஞானியுடையது என்றே நம்பிக்கொண்டிருந்தேன்....கர்நாடக சங்கீதம் என்ற பலமான அடிப்படையோடு தமிழ் இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்...பொறியியலாளராக இருந்து அடிப்படை இசைஞானத்துடன் இசை உலகுக்கு வந்து இமயத்தைத்தொட்டவர் எஸ்.பி.பி அவர்கள்...ஆகவே தனிப்பட்ட ரீதியில் கூட அவர்கள் இருவருக்கும் மிகவும் பொருந்தக்கூடிய பாடலே.....பாடல் இடம்பெற்ற படம் கூட "கௌரிமனோகரி"என்ற அழகான இராகத்தின் பெயரிலேயே வருகிறது...(படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை..:))

இசையின் இரண்டு துருவங்கள் இணைந்து கலக்கிய இந்தப்பாடல் எம் உள்ளத்தை கவர்ந்து செல்வதில் அதிசயம் எதுவும் இல்லை தானே...


இசையின் பெருமையைக்கூறும் இன்னொரு பாடல் இது....இசைஞானியின் அற்புதமான இசையமைப்பில் வெளிவந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்......

நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்ற போதும்
அந்த தீயே வெந்து போகும்

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
வாழும் லோகம் ஏழும்
எந்தன் பாடல் சென்று ஆளும்

இசைஞானியின் பாடல்களில் பெரும்பாலானவற்றை எடுத்துக்கொண்டால் இசையில்
வீணைக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பார்.இந்தப்பாடலிலும் ஒலிக்கும் அந்த வீணை இசை பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துச்செல்கிறது....

அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பாடலையும் அதற்குரிய உணர்ச்சி பாவங்களைக்கொடுத்துப்பாடுவதில் என்னை பொறுத்தவரை எஸ்.பி.பி க்கு நிகர் அவரே தான்..இந்தபாடலிலும் அதை நாம் அனுபவித்து உணரலாம்.



இந்தப்பாடலும் இசைஞானியின் அற்புதமான இசையில் எஸ்.பி.பி அவர்களின் இனிய குரலில் அமைந்த ஓர் பாடல் தான்.

இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்

எந்தன் மூச்சும் இந்தப்பாட்டும்
அணையா விளக்கே...

என்றவாறான அற்புதமான வரிகளைக்கொண்ட பாடல் இது....

Sunday, March 7, 2010

போற்றுதற்குரிய பெண்

உலக மகளிர் தினமான இன்று உலகமே வியந்து பார்க்கும்படியாக சாதனை படைத்த பெருமைக்குரிய  பெண்கள் பற்றிய தொகுப்பு ஒன்றை தரலாம் என்று நினைத்து பல்வேறு துறைகளிலிருந்தும் சாதனை படைத்த பெண்களில் முக்கியமான ஒரு சிலரின் தகவல்களையும் திரட்டி வைத்திருந்தேன்....ஆனால் கடந்த பதிவில் பெரும்பாலான நண்பர்களால் முன்வைக்கப்பட்ட நீளப்பிரச்சினையை கருத்தில்கொண்டு முக்கியமான ஒருவரை மட்டும் இந்தப்பதிவில் உள்ளடக்கலாம் என்று நினைக்கிறேன்.விண்வெளி வீராங்கனையாக விமானியாக விஞ்ஞானியாக புகழ் பெற்ற அரசியல் தலைவராக என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இருந்தாலும் மனிதருக்காக மனித குலத்துக்காக மகத்தான சேவை புரிந்த இந்தப்பெண் தான் என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப்பெண்ணின் பெருமைகளை சாதனை என்ற தலைப்பில் குறிப்பிடுவதை விட போற்றுதற்குரியதாக குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என்று நான் கருதுகிறேன்..


யாருமே அருகில் நெருங்கக்கூட விரும்பாத தொழுநோயாளிகளை கூடவே இருந்து அன்பு செலுத்தி அரவணைத்த கருணை உள்ளம் அவர்.ஒருமுறை விருந்து ஒன்றுக்கு சென்ற அன்னை திரும்பும் நேரத்தில் அங்கே உண்டவர்கள் மிச்சம் மீதியாக விட்டிருந்த உணவுப்பண்டங்களை ஒரு பொதிக்குள் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டிருந்தாராம். "ஏன் அவ்வாறு எச்சில் பண்டங்களை நீங்கள் எடுக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு  அவரின் பதில் "இந்த உணவுப்பண்டங்களையெல்லாம் கண்ணால் கூட பார்த்திராத எத்தனையோ ஏழைக்குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக தான் "என்றவாறு இருந்தது.ஆம்..அவரின் கருணையை அன்பை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

அவரின் பொன்மொழிகள் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...
  • உண்ண உணவில்லாமல் இருப்பதை விட யாராலும் தேடப்படாத விரும்பப்படாத கவனிக்கப்படாத மறக்கப்பட்ட ஒருவராக இருப்பதே மிகப்பெரிய வறுமையாகும்.
  • தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
  • ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்கள் கூட அன்புக்காக கவனிப்புக்காக தங்களுக்கென்று ஒரு சொந்தத்துக்காக  ஏங்கும் தாகம் பசி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
  • நீங்கள் மனிதர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களில் அன்பு செலுத்துவதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது போய்விடும்.
இதுவரை நான் குறிப்பிட்டுக்கூறிய இந்தப்பெண் யார்.....?

இன நிற மத சாதி பேதங்களை கடந்து எல்லா மனிதருக்குமே பொதுவாக பிடித்தமான ஒருவர் ஈன்ற தாய் தான்.ஆனால் எந்த அன்னையும் பொதுவாக மற்றவர்களை விட தன் பிள்ளையில் தான் கூட பிரியமாக இருப்பாள்.ஆனால் நோயுற்ற வறிய கைவிடப்பட்ட மக்கள் அனைவருக்குமே அன்னையாக இருந்தவர் இந்தப்பெண்..அவர் தான் என்றும் எங்கள் போற்றுதலுக்குரிய அன்னை தெரேசா அவர்கள்....

 1910 ம் ஆண்டு ஆவணி மாதம் 26ம் திகதி அல்பேனிய நாட்டில் பிறந்த அன்னை தெரசா தனது 18 ஆவது வயதில் திருத்துவ சகோதரிகள் குடும்பத்தில் இணைந்துகொண்டு 1931 ம் ஆண்டு இந்தியாவில் தனது பணியைத்தொடங்கினார்.1931 தொடக்கம் 1948 வரையான காலப்பகுதியில் கல்கத்தா புனித மரியாள் கல்லூரியில் கற்பித்த அன்னை தெரசா அக்காலப்பகுதியில் கல்கத்தாவின் சேரிப்புறத்தில் வறுமையாலும் நோயினாலும் அவதிப்படும்  மக்களின் துன்பங்களைப்பார்த்து பார்த்து தனது  வாழ்க்கைப்பாதையையே மாற்றிக்கொள்ள தீர்மானித்தார்.மேலிடத்தின் அனுமதியுடன் தனது கற்பித்தல் தொழிலை விடுத்து வறுமையின் பிடியில் சிக்கிய மக்களுக்காக தனது சேவையினை தொடங்கினார்.அவர் தனது சேவையினை தொடர்ந்து ஆற்றுவற்குரிய நிதிவளம் அவரிடம் இல்லாதிருந்தபோதும் கடவுள் மேல் பாரத்தைப்போட்டு சேரிப்புறப்பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை ஆரம்பித்து  தனது பணியைத் தொடங்கினார்.காலப்போக்கில் தொண்டர்கள் நிதிவளம் படைத்தவர்கள் அவரோடு இணைந்துகொண்டு பேருதவிபுரிந்ததால் அவர் தனது சேவையினை விரிவுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.இவ்வாறாக தனது பணியைத்தொடர்ந்த அன்னை அவர்கள் 1950 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7 ஆம் திகதி  அநாதரவான மக்களுக்கான தர்மஸ்தாபனமொன்றை ஆரம்பித்தார்.ஆதரவற்ற கைவிடப்பட்ட மக்களுக்கு அன்பு காட்டி அரவணைக்கும் இல்லமாக இந்த அமைப்பு திகழ்ந்தது.இன்று ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என எல்லாக்கண்டங்களிலும் உள்ள நாடுகளிலும் கிளைகளைக்கொண்டு பரந்துவிரிந்த அமைப்பாக இது திகழ்கிறது.இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்கள், அகதிகள், எயிட்ஸ் நோயாளிகள், வதிவிடமற்றவர்கள், போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள் என பலவேறு தரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

அன்னையின் புனிதப்பணிகளுக்காக பல்வேறுபட்ட விருதுகளை அவர் வென்றிருக்கிறார்.உலக சமாதானம் புரிந்துணர்வுக்கான நேரு விருது(1972) உலகின் மிகப்பெரிய கௌரவ விருதான நோபல் பரிசு(1979) என்பவை இங்கே குறிப்பிடத்தக்கவையாகும்.நோபல் பரிசை அவர் ஏற்றுக்கொண்டபோது அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இதோ இங்கே தந்திருக்கிறேன்...

"I choose the poverty of our poor people. But I am grateful to receive (the Nobel) in the name of the hungry, the naked, the homeless, of the crippled, of the blind, of the lepers, of all those people who feel unwanted, unloved, uncared-for throughout society, people that have become a burden to the society and are shunned by everyone."

மனிதகுலம் கண்ட அந்த மகத்தான பெண்ணைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் நான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.அக்கிரமங்கள் மலிந்துவிட்ட இன்றைய உலகில் மீண்டும் ஒரு அன்னைதெரேசா உதிக்க வேண்டும்  மனித நேயத்தை  வளர்க்கவேண்டும்  என்பதே இன்றைய நாளில் எங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும்...

தகவல்கள்-இணையம்

(எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தாலும் கூட இந்த தினத்தில் அவரைப்பற்றி அவர் காட்டிய வழிகளை நினைவுகூர்வது  பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.........:))